எம்ஜிஆர் மறைவு.. ஜெ.வுக்கு 2 நாட்களாக பச்ச தண்ணீர் கூட பல்லில் படலை.. சசிகலா சொன்ன வெளிவராத தகவல்
சென்னை: எம்ஜிஆர் மறைவின்போது ஜெயலலிதா 2 நாட்களாக பச்சை தண்ணீரை கூட அருந்தவில்லை என சசிகலா ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தந்தி டிவிக்கு சசிகலா அளித்த நேர்காணலில் கூறுகையில் எம்ஜிஆர் மறைவை அப்போதைய அமைச்சர்களோ நிர்வாகிகளோ ஜெயலலிதாவுக்கு தெரிவிக்கவே இல்லை. எனக்கு பிடிஐயிலிருந்து ஒரு நண்பர் போன் போட்டு இந்த விஷயத்தை தெரிவித்தார்.
இதையடுத்து நானும் ஜெயலலிதாவும் தினகரனும் ராமாவரம் தோட்டத்திற்கு சென்றோம். அப்போது எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

நெருங்கவிடவில்லை
இதையடுத்து சில காவல் துறை அதிகாரிகளின் உதவியுடன் உள்ளே சென்றோம். அப்போதும் ஜெயலலிதாவை எம்ஜிஆர் உடல் அருகே நெருங்கவேவிடவில்லை. இதையடுத்து பல்வேறு அவமானங்களுக்கு மத்தியில் நாங்கள் ராஜாஜி அரங்கில் அவரது உடல் அருகே போய் நின்றோம்.

ஜெயலலிதா
ஆனால் எங்களை சிலர் துன்புறுத்தினர். என்னை ஊசியால் குத்தினர். ஆனால் நான் இதை ஜெயலலிதாவிடம் சொல்லாமல் அவர் எம்ஜிஆரின் உடலை பார்க்க வேண்டும் என்பதால் பொறுத்துக் கொண்டேன். இரு தினங்களாக ஜெயலலிதா எதையும் சாப்பிடவில்லை.

அதிர்ச்சி
அவரது உடல் அருகே நின்றிருந்த போது கூட எந்த உணர்வையும் வெளிப்படுத்தாமல் அதிர்ச்சியிலேயே சோகமாக நின்றிருந்தார். தண்ணீர் அருந்துமாறு கூறியும் அவர் மறுத்துவிட்டார். இதையடுத்து நாங்கள் போயஸ் தோட்டத்திற்கு திரும்பினோம்.

புகைப்படம்
அங்கு ஜெயலலிதாவின் அம்மாவின் பெரிய புகைப்படம் இருக்கும். அந்த புகைப்படத்திற்கு முன் நின்று கொண்டு அழுதார். பின்னர் கீழே விழுந்து புரண்டார். அதில் அவருக்கு மயக்கம் ஏற்பட்டது, பின்னர் தண்ணீர் தெளித்து அவரை ஆசுவாசப்படுத்தினேன் என்றார் சசிகலா.












Click it and Unblock the Notifications