அட "ஆட்டமே" இனிதான்... மீண்டும் வருவார் சசிகலா.. தேர்தலுக்கு பின் உள்ள அரசியல் இதுதான்.. பரபர சர்வே
சசிகலா மீண்டும் அரசியலுக்கு வருவார் என நக்கீரன் சர்வே எடுத்துள்ளது
சென்னை: சசிகலா நிச்சயம் மீண்டும் அரசியலுக்கு வருவார்.. முன்பை விட வீரியமாக அவரது செயல்பாடுகளும் இருக்கும். அதிமுகவையும் அவர் கைப்பற்றப் போகிறார் என்று நக்கீரன் சர்வேயில் தெரிவித்து உள்ளனர்.
அதாவது நக்கீரன் நடத்திய கருத்துக் கணிப்பில் கலந்து கொண்ட தமிழக மக்களில் 44 சதவிகிதத்தினர் சசிகலா மீண்டும் அரசியலுக்கு வருவார் என உறுதியாகச் சொல்கிறார்கள். அதில் 43 சதவிகிதம் பேர் அவர் வந்தால் அ.தி.மு.க.வை வசப்படுத்துவார் என்றும் நம்புகிறார்கள்.
இவர்கள் சொல்வதைப் பார்த்தால் சசிகலா கதை முடிந்ததாக கூற முடியாது போல. அவருடைய ஆட்டம் இனிமேல்தான், அதாவது தேர்தலுக்குப் பிறகுதான் இருக்கும் என்றும் தோன்றுகிறது. இது நிச்சயம் திமுகவுக்கும் மறைமுக வார்னிங்தான்.

சர்வே
தேர்தல் சமயங்களில் நக்கீரன் நடத்தும் சர்வேக்கள் கவனிக்கப்படும். காரணம், மக்கள் தீர்ப்பை கிட்டத்தட்ட அது பிரதிபலிப்பதாக அமைந்திருக்கும். இந்த முறையும் அதுபோன்ற சர்வேக்கள் நடத்தப்பட்டுள்ளன. முதல் சர்வேயில் மீண்டும் அதிமுக ஆட்சியமைக்காது. திமுகவே ஆட்சியைக் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது சசிகலாவைக் குறி வைத்து அதிரடி சர்வே நடத்தியுள்ளனர்.

சிறை
அதில் மீண்டும் சசிகலா வருவாரா என்ற கேள்விக்கு ஆம் நிச்சயம் அவர் திரும்பி வருவார் என்று 44 சதவீதம் பேர் அடித்துக் கூறியுள்ளனர். "சசிகலா மீது ஊழல் கறை இருக்கிறது. அவர் சிறையிலிருந்து வந்தவர். அவரை சேர்த்துக்கொண்டால் கெட்டபெயர் வரும் என எடப்பாடி நினைக்கிறார். சசிகலா மீது ஜெ. மரண சந்தேகம் படிந்திருந்தது. இப்பொழுது மறைந்துவிட்டது. ஆனாலும் எடப்பாடி, சசியை ஏற்க மறுத்து, தினகரன், எடப்பாடிக்குப் போட்டியாக, " 'நான்தான் முதல்வர்' என சொன்னது எல்லாம் சசிகலாவை பாதித்துவிட்டது'' என்கிறார் பெண்ணாடத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தங்கசெல்வி.

சமூக மக்கள்
சசிகலாவின் துறவறத்தின் காரணமாக அவரது சமூக மக்கள் அ.தி.மு.க.வுக்கு எதிராகத் திரும்புவார்கள் எனவும், அவர் அரசியலுக்குத் திரும்பிவருவார் எனவும் அதே 44 சதவிகித மக்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள். "ஒட்டுமொத்த சமூகமே அ.தி.மு.க. மீது கடுமையான எதிர்ப்பில் உள்ளது. எடப்பாடி தென் மாவட்டத்துக்கு வரும்போது மக்கள் எதிர்ப்பைக் காட்டுவாங்க. என்னதான் இருந்தாலும் சசிகலா எங்கவீட்டுப் பொம்பளை. சசிகலா காலில் விழுந்துதான் எடப்பாடி முதல்வரானார். கட்சியைக் காப்பாற்றிய சசிகலாவைத் தூக்கி எறிந்ததை நாங்க எப்படி ஏற்போம்'' என்கிறார்கள் அவர்கள்.

சதவீதம்
அதேசமயம் சசிகலா மீண்டும் வர மாட்டார் என்று 26 சதவீதம் பேர் கூறியுள்ளனர். வருவாரா மாட்டாரா என்று உறுதியாக தெரியவில்லை என்று கூறியுள்ளோர் எண்ணிக்கை 30 சதவீதமாக உள்ளது. இதுவும் கவனிப்புக்குரியதாகும். அதாவது வந்தாலும் வரலாம் என்ற நோக்கத்தில் இவர்கள் கூறியிருக்கலாம். காரணம் சசிகலா எடுத்த முடிவு உறுதியானதாக இல்லைஎன்பதே பலரின் கருத்தாக இருக்கிறது.

அதிமுக
சசிகலா மீண்டும் திரும்பி வந்தால், அது நிச்சயம் தேர்தலுக்குப் பிறகுதான் இருக்கும். அப்போது திமுக பெரும்பான்மை பலம் பெறாமல், அதிமுகவும் கணிசமான இடங்களில் வெற்றி பெற்றால் , அமமுகவும் முடிவு செய்யக் கூடிய அளவில் வெற்றி பெற்றிருந்தால் நிச்சயம், அதிமுக சசிகலா பக்கம் வரக் கூடிய வாய்ப்புகள் பிரகாசமாகவே உள்ளன. அப்படி நடந்தால் யார் ஆட்சியமைப்பார் என்பதும் மில்லியன் டாலர் கேள்வியாக மாறும்.

தேர்தல்
மொத்தத்தில் சசிகலாவை வைத்துத்தான் தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் இருக்கலாம்.. ஒரு வேளை திமுக அமோக வெற்றி பெற்று விட்டால், சசிகலாவின் அரசியல் வாழ்க்கை அப்படியே அஸ்தமித்துப் போய் விடவும் வாய்ப்புகள் அதிகம்.












Click it and Unblock the Notifications