முதல்வர் ஸ்டாலின் சொல்வது வேடிக்கையா இருக்கு.. அக்காவின் கனவு நிறைவேறணும்.. சசிகலா திடீர் அறிக்கை
சென்னை: வெளியூர் சென்றவர்கள் யாரும் சென்னைக்கு திரும்ப வேண்டாம் என முதல்வர் சொல்வது வேடிக்கையாக உள்ளது என சசிகலா தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதிலும் நேற்று முன் தினம் முதல் நேற்று வரை சென்னையில் பலத்த மழை பெய்தது. 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் இத்தனை மழை பெய்ததாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர். ஆனாலும் இது மேகவெடிப்பு அல்ல, அதை போன்றதொரு மழை என தெரிவித்துள்ளார்கள்.
வடசென்னையில் கனமழை பெய்தது. புழல், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகள் திறந்துவிடப்பட்டுள்ளன. மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய முதல்வர் ஸ்டாலின் நேற்றைய தினம் சில பகுதிகளுக்கு சென்றிருந்தார். அப்போது அவர் மக்களுக்கு உணவு பொருட்களையும் அத்தியாவசிய தேவைகளையும் வழங்கினார்.

2 தினங்களுக்கு மழை
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னையில் அடுத்த 2 தினங்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது, அத்துடன் ஏரிகளும் திறந்துவிடப்பட்டுள்ளன. எனவே தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு சென்றுள்ள மக்கள் இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து சென்னை திரும்புமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

வெளியூர்
இதைத்தான் சசிகலா விமர்சனம் செய்துள்ளார். வெளியூர் சென்றவர்கள் யாரும் சென்னைக்கு திரும்ப வேண்டாம் என முதல்வர் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது என அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நேற்றைய தினம் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னையில் பெய்து வரும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை சீர்செய்ய தமிழக அரசு விரைந்து செயல்பட்டு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

துரிதம்
இது போன்ற காலங்களில் ஆட்சியாளர்கள், அரசு அதிகாரிகளோடு ஒன்றிணைந்து துரிதமாக செயல்பட்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களையும், ஏழை எளிய மக்களையும் காத்திடவேண்டும். தற்போது கொரோனா அச்சம் முற்றிலும் விலகாத நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைக்கும் இடங்களில் தகுந்த பாதுகாப்புடன் சுகாதார வசதிகளையும் செய்து தர வேண்டும்.

ஊழியர்கள்
சென்னை மாநகராட்சி ஊழியர்கள் பற்றாக்குறையைப் போக்க பிற மாவட்டங்களில் பணியில் உள்ளவர்களையும் இங்கு வரவழைத்து 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்பட்டு விரைவில் இயல்புநிலை திரும்ப வழி வகை செய்ய வேண்டும். மழை காலங்களில் பொதுவாக பயணங்களை தவிருங்கள் என்று சொல்லலாமே தவிர, வெளியூர் சென்றவர்கள் யாரும் சென்னைக்கு திரும்பி வரவேண்டாம் என்று ஆட்சியாளர்கள் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. வெளியூர் சென்றவர்கள் இங்கு உள்ள வீடு மற்றும் அவர்களது உடமைகளை பாதுகாக்க உடனே திரும்பி வருவார்கள். அவசர மருத்துவ தேவைகளுக்காகவும் வருபவர்கள் இருக்கிறார்கள்.

தேவையான பாதுகாப்பு
அவ்வாறு வருபவர்களுக்கும், இந்த அரசு தேவையான பாதுகாப்பு அளித்து காப்பாற்ற வேண்டுமே தவிர மக்களை பாதுகாக்காமல் இது போன்று வரவேண்டாம் என கூறி கைவிரித்துவிட்டால் என்ன செய்வது? சென்னை வாழ் மக்கள், வெள்ள பாதிப்புகளிலிருந்து இந்த அரசாங்கம் தங்களை எப்படியும் காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள், அவர்களை கைவிட்டுவிடாதீர்கள்.

ஜெயலலிதா
கடந்த 2016 தேர்தலின்போது என் அக்கா புரட்சித்தலைவி அவர்கள் வெள்ளத்தால் பாதிக்காத சென்னையை உருவாக்குவேன் என்று வாக்குறுதி கொடுத்தார்கள். அவர்களின் இந்த கனவு விரைவில் நனவாக வேண்டும் என்று எல்லாம்வல்ல ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன். தமிழக அரசு, துரிதமாக செயல்பட்டு, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தவிக்கும் மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை செய்து உடனடியாக காப்பாற்றிட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications