எடப்பாடி பழனிச்சாமியையும் ஓ பன்னீர் செல்வத்தையும் அரவணைத்து செல்ல விரும்புகிறேன்.. சசி தடாலடி
சென்னை: எடப்பாடி பழனிச்சாமியையும் ஓ பன்னீர் செல்வத்தையும் அரவணைத்து செல்லவே விரும்புகிறேன் என தொண்டர் ஒருவரிடம் சசிகலா பேசிய ஆடியோ வைரலாகி வருகிறது.
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையிலிருந்து விடுதலையான சசிகலா அதிமுக கொடி வைக்கப்பட்ட காரில் பெங்களூருவிலிருந்து சென்னைக்கு வந்தார். இதையடுத்து இவர் அதிமுகவை கைப்பற்ற முயற்சிப்பார் என பேசப்பட்டது.
ஆனால் அரசியலில் இருந்து ஒதுங்குகிறேன் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அண்மைக்காலமாக சசிகலா அதிமுக தொண்டர்களுடன் போனில் பேசும் ஆடியோ வைரலாகி வருகிறது. அதிமுகவை கைப்பற்றுவதில் குறியாக இருப்பது இவரது பேச்சில் நன்றாகவே தெரிகிறது. ஆனால் இதையெல்லாம் அதிமுகவினர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. எப்போது நிருபர்கள் கேட்டாலும் சசிகலா அதிமுகவின் உறுப்பினர் அல்ல என்றே கூறி வருகிறார்கள்.

அதிமுக தொண்டர்கள்
இவர் தொண்டருடன் பேசுவதும் அவ்வாறு பேசும் அதிமுக தொண்டர்கள் நீக்கப்படுவதுமாக நடந்தது. ஒவ்வொரு முறை பேசும் போதும் தன்னுடன் பேசும் தொண்டர்களை நீக்குவதற்கு இவர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இவர் பேசிய அத்தனை ஆடியோக்களிலும் அதிமுகவை கைப்பற்றுவது குறித்தே சசிகலா பேசி வருகிறார். அந்த வகையில் தொண்டர் ஒருவருடன் அவர் பேசும் ஆடியோ மீண்டும் வைரலாகியுள்ளது.

ஓ பன்னீர் செல்வம்
அதில் அவர் பேசுகையில் எடப்பாடி பழனிச்சாமியையும் ஓ பன்னீர் செலவத்தையும் அரவணைத்து செல்லவே விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து சங்கரன்கோவிலை சேர்ந்த கலைச்செல்வனுடன் அவர் பேசிய ஆடியோவில் வெளியாகியுள்ளது.

அதிமுக
அதில் நல்லபடியாக கழகத்தை கொண்டு சென்று அதிமுக ஆட்சியை மீண்டும் வரவைக்க வேண்டும். ஊரடங்கு முடிந்ததும் நான் அனைவரையும் சந்திப்பேன். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைவரையும் அரவணைத்து செல்லவே நான் விரும்புகிறேன்.

தொண்டர்கள் விருப்பம்
தொண்டர்களின் விருப்பப்படி கட்சியை வழிநடத்துவேன். எம்.ஜி.ஆர் ஜெயலலிதா காட்டிய வழியில் செல்வேன் என்று அவர் தெரிவித்துள்ளார். இவர் இப்படி சொல்லும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமியோ இன்றைய பேட்டியில் சசிகலாவுக்கு எதிராகவே பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தகவல்கள்
விரைவில் ஜெயலலிதாவின் சமாதிக்கு சசிகலா செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அவர் தொண்டர்களை சந்தித்த தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளயிருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா பரவல் முடிந்தவுடன் இவர் ஜெயலலிதா சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்துவார் என தெரிகிறது. இத்தனை நாட்களாக ஆடியோவில் பேசி அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்திய சசிகலா, தற்போது வீடியோவில் பேசி வருகிறார்.












Click it and Unblock the Notifications