முக்குலத்தோர் ஓட்டு ரொம்ப முக்கியம்.. அதிமுகவில் மீண்டும் சசிகலா? எடப்பாடிக்கு போன ‛டிமாண்ட்’
சென்னை: அதிமுகவில் மீண்டும் சசிகலாவை சேர்க்க வேண்டும். அப்போது தான் முக்குலத்தோர் சமுதாய மக்களின் வாக்குகளை தக்க வைக்க முடியும் என்று ராமநாதபுரம் நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமியிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி உள்ளார். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் அதிமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தனர். இந்நிலையில் தான் லோக்சபா தேர்தல் தோல்வி குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொகுதி வாரியாக நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

இந்த ஆலோசனை கூட்டம் என்பது சென்னையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் நடந்து வருகிறது.கடந்த 10ம் தேதி தொடங்கிய ஆலோசனை கூட்டம் இன்று 6வது நாளாக நடந்தது. இன்று காலையில் ராமநாதபுரம் தொகுதி நிர்வாகிகளுடனும், மதியம் நெல்லை தொகுதி நிர்வாகிகளுடனும் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை மேற்கொண்டார்.
இதில் ராமநாதபுரம் லோக்சபா தொகுதி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிச்சாமி 3 மணிநேரம் வரை ஆலோசனை மேற்கொண்டார். ஏனென்றால் இந்த நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் களமிறங்கிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நாவஸ் கனி (பெற்ற வாக்குகள் 5,09,664) வென்றார். பாஜக கூட்டணியில் சுயேச்சையாக களமிறங்கிய முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் 2ம் இடம் பிடித்தார். அவர் 3,42,882 ஓட்டுகள் பெற்றார். இங்கு அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டார். அவர் 99,780 ஓட்டுகள் பெற்றார்.
ஓ பன்னீர் செல்வத்தை கட்சியில் இருந்த எடப்பாடி பழனிச்சாமி நீக்கம் செய்தார். இந்நிலையில் தான் அவர் அதிமுக வேட்பாளரை முந்தி 2ம் இடம் பிடித்தது எப்படி என்பது பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அப்போது ராமநாதபுரம் நிர்வாகிகள், ‛‛ஓ பன்னீர் செல்வம் அதிகளவில் பணம் செலவழித்தார். திருவாடானை சட்டசபை தொகுதியில் அதிமுகவின் ஓட்டு சரிந்தது. முக்குலத்தோர் சமுதாயத்தினர் ஓ பன்னீர் செல்வம் பக்கம் ஓட்டுப்போட்டுள்ளனர். இதனால் கட்சி வேட்பாளர்கள் கடினமாக உழைத்தாலும் கூட ஓட்டு கிடைக்கவில்லை'' என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் ‛‛ராமநாதபுரத்தில் முக்குலத்தோர் சமுதாய மக்கள் அதிகம் உள்ளனர். இதனால் சசிகலாவை கட்சியில் இணைத்தால் நன்றாக இருக்கும்'' எனவும் கூறியதாக கூறப்படுகிறது. இதனை கேட்ட எடப்பாடி பழனிச்சாமி எந்த பதிலும் சொல்லவில்லை. மாறாக, ‛‛தேர்தல் தோல்விகளை மறந்து விடுங்கள். இனி கடினமாக உழையுங்கள். வரும் தேர்தலில் நாம் வெல்ல வேண்டும். 2026 சட்டசபை தேர்தல் கூட்டணியை பற்றி கவலை கொள்ள வேண்டாம். நிச்சயம் வலிமையான கூட்டணி அமைக்கப்படும்'' என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே தான் நாளைய தினம் சசிகலா அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். தென்காசியில் இருந்து சசிகலா நாளை அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். முன்னதாக சசிகலா நான் மீண்டும் அதிமுகவுக்கு திரும்புவேன். தொண்டர்கள் கவலை கொள்ள வேண்டாம் என பேட்டியளித்து இருந்தார்.
மேலும் அதிமுகவில் சசிகலாவை இணைக்க வேண்டும் என நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமியிடம் கூறுவது இது முதல் முறையல்ல. கடந்த சில நாட்களாக பல மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிச்சாமியிடம் சசிகலா, ஓ பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் உள்ளிட்டவர்களை கட்சியில் சேர்க்க வலியுறுத்தியதாகவும், அதற்கு எடப்பாடி பழனிச்சாமி மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications