சீன்லயே "அவர்" வரல.. அதுக்குள்ள வெலவெலத்து போச்சு.. 2 சிக்கலில் எடப்பாடி பழனிசாமி.. லாபத்தில் திமுக
சசிகலாவின் வருகையை தடுக்க வேண்டிய கட்டாயம் எடப்பாடிக்கு ஏற்பட்டுள்ளது
சென்னை: நாளுக்கு நாள் அதிமுகவுக்குள் சிக்கல் அதிகரித்து கொண்டே போகிறது.. எடப்பாடி பழனிசாமியும், ஓபிஎஸ்ஸும் தங்கள் செயல்பாடுகளினாலேயே, செல்வாக்கை வெகுவாக இழந்து கொண்டிருப்பதாக அதிருப்திகள் வெளிப்படுகின்றன.
நாளுக்கு நாள் சசிகலாவின் பேச்சு அதிகமாகி கொண்டிருக்கிறது.. எடப்பாடி பழனியோ அமைதியை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்.. இதனால் அதிமுக கூடாரம் ஆட்டம் கண்டு கொண்டிருக்கிறது..
எடப்பாடி பழனிசாமி அசால்ட்டாக விட்டுவிட்டாரா? அல்லது எதற்காக அமைதியாக இருக்கிறார் என்று தெரியவில்லை..

2 நெருக்கடிகள்
இப்போது 2 விதமான நெருக்கடிக்கு எடப்பாடி பழனிசாமி ஆளாகி உள்ளார்.. தூத்துக்குடியில் தீர்மானம் நிறைவேற்றினார்களே, அதை பற்றி இதுவரை அவர்களிடம் ஏன் என்று கேட்கவில்லை.. விவாதிக்கவில்லை.. சசிகலாவுக்கு எதிராக இப்படி மாவட்ட அமைப்புகளை தீர்மானம் நிறைவேற்றச் சொல்லி கேட்டிருந்தும், இன்னும் பல மாவட்டங்களில் தீர்மானமும் நிறைவேற்றவில்லை..

கோவில்பட்டி
இதோ அடுத்தபடியாக, கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நகர ஒன்றிய நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் கடலையூர் ரோட்டில் நடந்திருக்கிறது... எல்லாவற்றிற்கும் மேலாக, "தொண்டர்களையும் நிர்வாகிகளையும் கட்சியை விட்டு நீக்கும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியாரின் செயல்பாடுகள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது, கட்சி அடிப்படை விதிகளுக்கு மாறாக தொடர்ந்து இந்த நிலை நீடிக்குமேயானால் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரையும் கட்சியிலிருந்து நீக்குவதற்காகத் தொண்டர்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு விட்டன.

இரட்டை தலைமை
அதாவது, கட்சிக்கு இரட்டை தலைமை கூடாது, ஒற்றை தலைமைதான் வேண்டும் என்று வெளிப்படையாகவே அவர்கள் பேச ஆரம்பித்துவிட்டனர். அதுமட்டுமல்ல, இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கட்சியால் நீக்கப்பட்ட மாவட்ட ஜெ.பேரவை இணை செயலாளர் ரூபவேலனும் கலந்து கொண்டுள்ளது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது..

பாஜக
"சசிகலாவிடம் ஒருவித ஆளுமை இருக்கிறது.. கட்சியை அவர் வழிநடத்தட்டும், தென்மாவட்டங்களை இழந்துடாதீங்க" என்று பாஜக பலமுறை அதிமுக தலைமையிடம் கேட்டு கொண்டதன் அர்த்தமும் இதுதான்.. இன்னும் சசிகலா சீனிலேயே வரவில்லை.. வெறும் செல்போன் பேச்சுதான்.. அந்த ஒன்றை வைத்து கொண்டே, இரட்டை தலைமைக்கு ஆட்டம் காட்டி வருவதுதான் ஆளுமை என்பது.

அவமானம்
இது ஓபிஎஸ்ஸைவிட, 4 வருடம் ஆட்சி புரிந்த எடப்பாடி பழனிசாமிக்குதான் மிகப்பெரிய அவமானத்தை தேடி தந்து கொண்டிருக்கிறது.. உண்மையாக கட்சிக்காக உழைத்தவர்களையும் கட்சியில் இருந்து நீக்கி கொண்டுமிருக்கிறார்.. இதுவே தொண்டர்களுக்கு ஒருவித சோர்வை தந்து வருகிறது.. அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

சசிகலா லாபி
30 வருஷம் ஜெ.விடம் லாபி செய்தவருக்கு, எடப்பாடி பழனிசாமியையும், ஓபிஎஸ்ஸையும் சமாளிப்பது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை.. சசிகலாவை யாராலும் கன்ட்ரோல் செய்ய முடியாது.. அதிமுகவை மீட்போம் என்பது போய், இரட்டை தலைமையே தேவையில்லை, அவர்களையும் கட்சியை விட்டே நீக்குவோம் என்று பேசும் அளவுக்கு அதிமுகவில் வாதங்கள் வலுத்து வருகின்றன.. இதை எடப்பாடி பழனிசாமி எப்படி சமாளிக்க போகிறார்?

உள்ளாட்சி தேர்தல்
உள்ளாட்சி தேர்தலுக்கு திமுக தயாராகி கொண்டிருக்கிறது.. கூட்டணியையும் வலுப்படுத்தி கொண்டிருக்கிறது.. ஆனால் கடந்த சட்டமன்ற தேர்தலிலேயே கூட்டணியை பலவீனமாக்கியது எடப்பாடி பழனிசாமிதான்.. அவரது பிடிவாதம்தான் தேமுதிக, அமமுக கட்சிகளை உள்ளே சேர்க்காமல் இருக்க காரணமாக இருந்தது.. இப்போதும் அதே பிடிவாதம் இந்த தேர்தலில் தொடருமானால், அதிமுகவை சரிவில் இருந்து யாராலும் மீட்க முடியாது.. திமுகவின் அசுர வளர்ச்சியையும் கட்டுப்படுத்த முடியாது.












Click it and Unblock the Notifications