சாத்தான்குளம் தந்தை மகன் மரணம்.. லாக்அப் டெத் கிடையாது.. அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து!
சென்னை: சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணம் என்பது லாக்அப் மரணம் கிடையாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டி சிறையில் போலீஸ் கஸ்டடியில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இரண்டு பேர் மரணம் அடைந்தது நாடு முழுக்க விமர்சனங்களை சந்தித்து வருகிறது. லாக்டவுன் நேரத்தில் கடை வைத்து இருந்ததாக கூறி கைது செய்யப்பட்ட இவர்கள் மோசமாக துன்புறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
கடந்த 19ஆம் தேதி போலீசால் கைது செய்யப்பட்டது விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இவர்கள் கோவில்பட்டி சிறையிலேயே மர்ம மரணம் அடைந்தனர். நாட்டையே இந்த சம்பவம் உலுக்கி உள்ளது.
சாத்தான்குளம் துயரம்.. ஜெயராஜ் குடும்பத்தினர், மக்களுடன் துணை நின்று.. மொத்தமாக ஸ்கோர் செய்த கனிமொழி
என்ன கருத்து
இந்த நிலையில் சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிங்ஸ் மரணம் என்பது லாக்அப் மரணம் கிடையாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது பேட்டியில் பொதுவாக லாக்அப் மரணம் என்பது லாக் அப் உள்ளே நடக்க வேண்டும். அதாவது விசாரணையின் போதே கைதிகள் மரணம் அடைந்தால் அது லாக் அப் மரணம். ஆனால் சாத்தன்குளத்தில் அப்படி நடக்கவில்லை.
எப்படிப்பட்ட சம்பவம்
அங்கு சாத்தான்குளத்தில் நடத்த சம்பவம் வித்தியாசமானது. அங்கு போலீசார் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரையும் கைது செய்துள்ளனர். அதன்பின் அவர்களை நீதிபதிகள் முன் ஆஜர்படுத்தி இருக்கிறார்கள். பின்னர் கிளை சிறையில் அடைத்து உள்ளனர். கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட பின் இரண்டு நாட்கள் கழித்துதான் இவர்கள் மரணம் அடைந்து உள்ளனர்.
போலீஸ் லாக் அப்
அவர்கள் போலீஸ் லாக் அப்பில் பலியாகவில்லை. இதனால் சாத்தான்குளம் விவகாரம் லாக்கப் மரணம் கிடையாது. இதை வைத்து திமுக அரசியல் செய்கிறது. திமுக காலத்திலும் கூட லாக்அப் டெத் நிகழ்ந்து இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம். திமுகவின் கனிமொழி உள்ளிட்டோர் இதை வைத்து தீவிரமாக அரசியல் செய்கிறார்கள். இந்த பிரச்சனையில் விதிமுறைகளை பின்பற்றி அரசு செயல்பட்டு வருகிறது.
உடனடியாக நடவடிக்கை
உடனடியாக குற்றஞ்சாட்டப்பட்ட போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தற்போது இந்த வழக்கை விசாரித்து வருகிறது. நீதிமன்ற வழிமுறைகளை பின்பற்றி நாங்கள் செயல்பட்டு வருகிறோம். நீதிமன்றம் என்ன வழிமுறைகள் சொல்கிறதோ, என்ன தீர்ப்பு சொல்கிறதோ அதை செயல்படுத்த தயாராக இருக்கிறோம், அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார்.