"அதென்னப்பா ஸ்டாலின் சார் கூட்டணி பேரு?" அன்று விஜய் நக்கல்! இன்று கை கொடுத்த மக்கள் நல கூட்டணி
சென்னை: சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்ததை மக்கள் நல கூட்டணி என விஜய் நக்கல் செய்த நிலையில் இன்று அந்த கூட்டணிதான் தவெக ஆட்சி அமைய வழியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அது போல் விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என தவெகவை விட, ஆளுநரை விமர்சித்ததும் அந்த கூட்டணியில் இருந்த கட்சித் தலைவர்கள்தான்.
தமிழக சட்டசபை தேர்தலில் தவெக தனித்து போட்டியிட்டது. தவெக வேட்பாளர்களை விஜய் கடந்த மார்ச் 29ஆம் தேதி அறிவித்திருந்தார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடந்த இந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் விஜய் பேசியதாவது: எம்எல்ஏன்னா சும்மா இல்லை. எல்லை காப்பானாக இருக்க வேண்டும். எம்எல்ஏ என்றால் தொகுதிக்கான எல்லைக்கான மக்கள் காப்பாளராக இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்களைதான் நான் தேர்வு செய்துள்ளேன்.

களத்தில் மக்களோடு மக்களாக இருக்கக்கூடிய ஆட்களை தேர்ந்தெடுத்து இருக்கிறேன். எல்லாம் இடத்திலும் நான் செல்ல முடியாதுல்ல. நானே பார்த்து பார்த்து வேட்பாளரை தேர்ந்தெடுத்துள்ளேன்.... மக்களே இவர்களை வெற்றி பெற வைப்பது உங்கள் பொறுப்பு. நம்மளுடைய அக்கா, அண்ணன், தம்பி, தங்கை என வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறேன். அவர்களை வேட்பாளராக ஆக்க வேண்டியது உங்களுடைய பொறுப்பு.
கூட்டம் ஓட்டாக மாறாதா என்று கேட்கிறார்கள். இந்த தேர்தல் எல்லாரும் சொல்லும் தேர்தல் கிடையாது. இது இருமுனை போட்டி மட்டும்தான். ஒன்னு இந்த மக்கள் கூட்டணியான டிவிகே, இன்னொன்று ஸ்டாலின் சார் கூட்டணி.
கட்சி தொடங்கி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது ஆனால் இன்னும் கூச்சல் சத்தம் முடியவில்லை. விஜய்க்குலாம் என்னப்பா செல்வாக்கு இருக்கு, கூட்டத்தை வச்சி சொல்றீங்களா? அதெல்லாம் வேடிக்கை பார்க்க வரக்கூடிய கூட்டம். கூட்டம் வந்தால் பெரிய ஆளா, கூட்டம் ஓட்டா மாறுமா, ஓட்டு சீட்டா மாறுமா என வன்மத்தோடு கேள்வி கேட்கிறார்கள்.
அவர்களுக்கு ஒன்று தான் இந்த தேர்தல் எல்லாரும் சொல்வது போல் 4 முனை, 400 முனை எல்லாம் கிடையாது. இரு முனை போட்டி மட்டும்தான். மக்கள் கூட்டணியான நமக்கும் ஸ்டாலின் சார் கூட்டணிக்கும் மட்டும்தான் இந்த தேர்தல்!
அதென்னப்பா ஸ்டாலின் சார் கூட்டணி பேரு, மக்கள் நலக் கூட்டணியா? மொத்த பேக்கேஜும் அங்கதான இருக்குது! ரிசல்ட் என்னன்னு தெரிஞ்சதாலயோ என்னவோ ஸ்டாலின் சார், மக்கள் நல கூட்டணியாகவே மாத்திட்டாரு.
உடைந்த கிளாஸை ஒட்ட வைத்த மாதிரி, கிழிந்த துணியை தைச்ச மாதிரி, இது ஒரு ஒட்டு போட்ட ஒரு கூட்டணி அவ்வளவுதான்! அதனால் நீங்கள் ஏற்கெனவே முடிவு செய்து வைத்திருப்பது போல் உங்களது ஓட்டை சிந்தாம, சிதறாம நமது தவெக வேட்பாளர்களுக்கும் விசில் சின்னத்திற்கும் தயவு செய்து ஓட்டு போட்டுடுங்க! இவ்வாறு விஜய் பேசியிருந்தார்.
மாற்றத்தை விரும்பிய மக்கள் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்களித்தனர். கடந்த 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையில் திமுகவுக்கு 59 இடங்களிலும் அதிமுகவுக்கு 47 இடங்களிலும் வெற்றி கிடைத்தது. புதியதாக களம் கண்ட தவெகவுக்கு 108 இடங்கள் கிடைத்தன.
மக்கள் மாற்றத்தை விரும்பிய போதிலும் பெரும்பான்மைக்கு தேவையான 118-ஐ யாருக்கும் கொடுக்கவில்லை என சொல்லப்பட்டது. இந்த நிலையில் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் விஜய் வென்றதால் ஒரு தொகுதியில் ராஜினாமா செய்ய வேண்டும். இதனால் தவெகவின் உண்மை பலம் 107 ஆனது.
பின்னர் காங்கிரஸ் கட்சி ஆதரவு கொடுத்தது 112 ஆக ஆனது. இதையடுத்து கம்யூனிஸ்ட்கள், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளிடம் தவெக ஆதரவு கோரியது. அந்த வகையில் கம்யூனிஸ்ட்கள் நிபந்தனையற்ற ஆதரவு தந்ததை அடுத்து 116 ஆக உயர்ந்தது.
இந்த நிலையில் மீதம் 2 சீட்களுக்கு விசிகவிடம் ஆதரவு கோரப்பட்டது. திருமாவளவன் நேற்று இரவெல்லாம் ஆலோசனை நடத்திவிட்டு இன்று மாலை 4 மணிவாக்கில்தான் ஆதரவு கடிதத்தை ஆதவ்விடம் கொடுத்தார். இதனால் தவெகவின் பலம் 118 என்ற மேஜிக் நம்பரை எட்டியது. எதிர்பாராத விதமாக ஐயூஎம்எல் கட்சியும் விஜய் கட்சிக்கு ஆதரவு என தெரிவித்ததால் 120 எம்எல்ஏக்களின் பலம் தவெகவுக்கு கிடைத்தது.
அன்று மக்கள் நல கூட்டணியை விஜய் கிண்டல் செய்தாரே இன்று அந்த கூட்டணியில் (சிபிஐ, சிபிஎம், விசிக) இருந்த 3 கட்சிகளால்தான் 6 தவெக ஆட்சி அமைக்க போகிறது என்பதுதான் நிதர்சனம்!












Click it and Unblock the Notifications