பரிசு வேண்டாம்.. நோட்டு கொடுங்க.. அரசுப் பள்ளி மாணவர்களுக்காக இறங்கிய தவெக அமைச்சர்
சென்னை: தவெக ஆட்சியமைத்து 3 வாரங்களாக போகிறது. முதல்வர் விஜய் அறிவித்த திட்டங்களை விட சர்ச்சைகள் தான் அதிகம் உள்ளன. அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பலரும் ரீல்ஸ் மோகங்களில் இயங்கி வருவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் தவெக அமைச்சர் விக்னேஷ் தனக்கு சால்வை, பூங்கொத்து வழங்க வேண்டாம், நோட் எழுது பொருட்கள் கொடுங்கள். அதை அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கி உதவுவோம் என்று கூறியுள்ளார்.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக விக்னேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர். தவெக கோவை தெற்கு மாவட்ட செயலாளராக உள்ளார். சட்டமன்ற தேர்தலில் கிணத்துக்கடவு தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். 38 வயதாகும் அவரை முக்கியத்துவம் வாய்ந்த மதுவிலக்கு இலாகா ஒதுக்கப்பட்டது.

டாஸ்மாக்கில் அவர் அதிரடியாக பல விஷயங்களை செய்து கொண்டிருக்கிறார். டாஸ்மாக்கில் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்துவேன் என்று விக்னேஷ் கூறியுள்ளார். இரவு 10 மணிக்கு மேல் மது விற்பனை செய்தால் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள். 11 டு 11 மனமகிழ் மன்றங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் விஷயம் விஷ்வருபமெடுத்து வருகிறது. தேர்தலுக்கு முன்பே பாட்டிலுக்கு 10 ரூபாய் என்று விஜய் பாட்டு பாடி அது வைரலானது. பாட்டிலுக்கு 10 ரூபாய் விவகாரத்தில் உடனடியாக மாற்றம் ஏற்படுத்த முடியாது. ஆனால் விரைவில் அந்த முறை ஒழிக்கப்படும் என்று விக்னேஷ் கூறினார்.
இந்நிலையில் அமைச்சர் விக்னேஷ் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், என்னை சந்திக்க வருபவர்கள் மாலை, சால்வை மற்றும் பூங்கொத்து மற்றும் பரிசு பொருட்களை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக நோட், பேனா, பென்சில் உள்ளிட்ட எழுது பொருட்களை வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
நீங்கள் வழங்கும் இந்த பொருட்கள், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பேருதவியாக அமையும் என்று கூறியுள்ளார். இந்தப் பதிவை தவெகவினர் சமூகவலைதளங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications