ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!
சென்னை: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க பிரத்யேகமாக தமிழ்நாடு காவல்துறையில் சிங்கப்பெண் அதிரடிப்படை பிரிவு உருவாக்கப்பட்டிருந்தது. இதன் தொடக்க விழா நாளை நடைபெற இருந்த நிலையில் தற்போது இந்த விழா ரத்து செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை, ஆட்சியாளர்களுக்கு பெரிய நெருக்கடியை கொடுத்து வருகிறது. அதிலும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துதான் வருகின்றன. இதனை தடுக்க காவல்துறையில் சிங்கப்பெண் அதிரடிப்படைப்பிரிவு உருவாக்கப்பட்டிருந்தது.

இவர்களின் வேலை பள்ளி, கல்லூரிகள், ஐடி பார்க்குகள், பூங்காக்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுதான். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர்களை உரிய ஆதாரங்களுடன் கைது செய்யும் வகையில், நவீன கருவிகள் பொருத்திக்கொள்ள வசதியாக இவர்களின் யூனிபார்ம் டிசைன் செய்யப்பட்டிருந்தது.
தமிழக காவல்துறையில் காக்கி நிறத்தில் பேண்ட், சட்டைதான் யூனிபார்மாக கொடுக்கப்படும். ஆனால், சிங்கப்பெண் அதிரடிப்படையினருக்கு நீல சிற சட்டடையும், காக்கி நிற பேண்ட்டும் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த திட்டத்தின் தொடக்க விழா ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நாளை நடக்க இருந்தது. முதலமைச்சர் விஜய் இதனை தொடங்கி வைக்க இருந்தார். எனவே தேவையான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது. ஆனால், தற்போது நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த திட்டம், தொடக்கத்திலேயே சறுக்கியிருப்பது விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. தவெக அரசு இந்த திட்டத்தை முழு முயற்சியோடு, எவ்வளவு இடையூறுகள் வந்திருந்தாலும் தொடங்கி வைத்திருக்க வேண்டும். ஏனெனில் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்று இன்னும் ஒரு மாதம் கூட முழுமையாக முடிவடையாத நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்சனை சீரியஸான பிரச்சனையாக வெடித்திருக்கிறது.
இதை சரி செய்ய, எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை நிறுத்த, சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டம் சரியான ஒன்று. ஆனால், அதை தொடங்குவதிலேயே இவ்வளவு தாமதம் ஏற்பட்டிருக்க கூடாது என்று பலரும் பேச தொடங்கியிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications