மனசு கேக்கல.. ஆனால் எதுக்கும் துணிந்தவன் சூர்யா.. வீடியோ போட்டு சப்போர்ட்டுக்கு வந்த சத்யராஜ்
சத்யராஜ் சூர்யாவுக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளார்
சென்னை: சூர்யாவின் "ஜெய் பீம்" படத்திற்கு ஆதரவு தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார் நடிகர் சத்யராஜ்.. டைரக்டர் பாரதிராஜா முன்மொழிந்ததை, தானும் அப்படியே வழிமொழிவதாக சத்யராஜ் அதில் தெரிவித்துள்ளார்.
Recommended Video
ஜெய்பீம் படத்தைப் பார்த்துவிட்டு, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், பல்வேறு திரையுலக பிரபலங்களும் பாராட்டு தெரிவித்தனர்.
ஆனாலும் படத்தில் வரும் ஒரு எதிர்மறை கேரக்டருக்கு வன்னியர் என சாதி முத்திரை குத்தியிருப்பதாக, எதிர்ப்பும் சர்ச்சையும் கிளம்பியது... இதை பாமக கையில் எடுத்து வருகிறது.. அக்கட்சியின் இளைஞரணி தலைவர் இது குறித்து சூர்யாவுக்கு கடிதம் எழுதினார்... சூர்யாவும் பதில் கடிதம் எழுதினார்.

சூர்யா
இதனிடையே, திரை பிரபலங்கள் பலரும் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். டைரக்டர்கள் ரஞ்சித், பாரதிராஜா, வெற்றிமாறன் உள்ளிட்டோர் தங்களது ஆதரவை சூர்யாவுக்கு தெரிவித்துள்ளனர்.. அந்த வரிசையில் நடிகர் சத்யராஜும் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளதாவது:

போற்றுதலுக்குரியவை
"நமது பெருமை மிகு முதல்வர் ஸ்டாலின் முதற்கொண்டு, ஜெய்பீம் படத்திற்கு மிகப்பெரிய ஜாம்பவான்கள், கலைவித்தகர்கள் தங்கள் பாராட்டுகளை தெரிவித்துவிட்டார்கள்... அதை தாண்டி நான் ஒன்னும் சொல்லப் போறதில்லை... என்னை பொறுத்தவரைக்கும் சில படங்கள் கை தட்டுவதற்கும், விசில் அடிப்பதற்கும், ரசிப்பதற்குமான படமாக இருக்கும். சில படங்கள் பாராட்டுதலுக்குரிய படமாக இருக்கும்... மிகச் சில படங்களே போற்றுதலுக்குரிய படங்களாக இருக்கும். அதில் முக்கியமான இடத்தை ஜெய் பீம் படம் பெற்றுள்ளது.

துணிந்தவன் சூர்யா
அதில் எதுக்கும் துணிந்தவன் சூர்யா கதாநாயகனாக நடித்திருக்கிறார். டைரக்டர் ஞானவேல் உள்ளிட்ட அத்தனை 'ஜெய் பீம்' திரைக்கலைஞர்களையும் நான் மனதாரப் பாராட்டுகிறேன். நிறைய பேர் பாராட்டிவிட்டார்கள். இப்போது என்னுடைய பாராட்டுகளையும், நன்றிகளையும் சில பேருக்கு தெரிவிப்பதற்காக இந்த பதிவு.

பாரதிராஜா
சூர்யா உள்ளிட்ட, குறிப்பாக சூர்யாவுக்கு வந்த பிரச்சனைகளுக்கு ஆதரவாக கலை உலகத்தை சேர்ந்தவர்கள் குரல் கொடுக்கிறாங்க.. ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு.. தென்னிந்திய திரைப்பட வர்த்தகச் சபையிலிருந்து எங்கள் இயக்குநர், இயக்குநர் இமயம் பாரதிராஜா குரல் கொடுத்திருக்கிறார். நான், என் நண்பன் மணிவண்ணன் எல்லாம் பாரதிராஜா சாரை, "எங்க டைரக்டர்" என்றுதான் சொல்வோம்.

நிறைவு
அவர் குரல் கொடுத்திருப்பது ரொம்ப சிறப்பாகவும், மனதிற்கு நிறைவாகவும் இருக்கு.. பாரதிராஜா சார் கொடுத்த அறிக்கையை தாண்டி ஒரு விஷயத்தை சொல்லிட முடியாது... அதற்கு பாரதிராஜா சாருக்கு நான் நன்றியோ, பாராட்டோ சொன்னால் நிச்சயமாக கோபித்துக்கொள்வார். ஃபோன் பண்ணி, என்ன இதுக்கெல்லாமா பாராட்டு?ன்னு கேட்பார்.. இருந்தாலும் மனசு கேட்காமல்தான் இந்தப் பதிவை போடுகிறேன்.

வழிமொழிகிறேன்
பாரதிராஜா மிக அற்புதமாக சொல்லியிருக்கார். திரைக்கலைஞர்களுக்கு வேறு சில காரணங்களுக்காக ஒரு படத்திற்கு பிரச்சனை வந்தால், அது அவர்களின் தனிப்பட்ட விஷயம்... ஆனால் சமூகநீதிக்காக குரல் கொடுக்கும்போது, சமூக மாற்றத்திற்காகக் குரல் கொடுக்கும்போது, பிரச்சனைகள் வரும்போது, கலை உலகத்தைச் சார்ந்தவர்கள் எல்லோரும் முன்நிற்க வேண்டுமென்று நான் ஆசைப்படறேன்.. அந்த வகையில், இயக்குநர் பாரதிராஜா அவர்கள் முன்மொழிந்ததை, நான் அப்படியே வழிமொழிகிறேன். நன்றி! வணக்கம்" என்று கூறியுள்ளார் சத்யராஜ்.












Click it and Unblock the Notifications