Exclusive: நான் அரசியலுக்கு வருவது உறுதி.. திவ்யா சத்யராஜ் பிரத்யேகப் பேட்டி!
சென்னை: நான் அரசியலுக்கு வருவது உறுதி என்று அடித்துக் கூறுகிறார் திவ்யா சத்யராஜ்.
நடிகர் சத்யராஜ் மகள் என்ற அடையாளம் தவிர பிரபல ஊட்டச்சத்து நிபுணர் என்ற இன்னும் ஒரு அடையாளம் கொண்டவர் திவ்யா சத்யராஜ். தற்போது அரசியல் அவதாரம் பூணவும் அவர் தயாராகி வருகிறார்.

அரசியலுக்கு வருவதற்கான முன்னெடுப்பு பணிகளை தொடங்கியுள்ளார். இது குறித்து ஒன் இந்தியா தமிழுக்காக அவர் அளித்த பேட்டியின் விவரம் பின்வருமாறு:
கேள்வி: அரசியலை பற்றிய உங்கள் பார்வை என்ன?
பதில்: என்னை பொறுத்தவரை அரசியல் என்பதை மக்களுக்கு சேவை செய்வதற்கான தளமாகத் தான் கருதுகிறேன். அரசியலை சாக்கடை, ஊழல் என்றெல்லாம் வெளியில் இருந்து விமர்சித்து ஒதுங்காமல், அதில் பங்கேற்று என்னவெல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்யமுடியுமோ அதை செய்ய வேண்டும் என நினைக்கிறேன்.

கேள்வி: அரசியல் ஆசை எப்போது ஏற்பட்டது?
பதில்: எங்கள் வீட்டில் அரசியலை பற்றி எப்போதும் பேசுவோம். சினிமா, அரசியலை தவிர்த்து மற்ற விஷயங்களை எங்கள் வீட்டில் அதிகம் பேசியதில்லை. அதனால் அரசியல் தொடர்பான புரிதல் எனக்கு சிறுவயது முதலே இருக்கிறது. அதனால் அரசியல் என்பதை நான் புதிதாக பார்க்கவில்லை.
கேள்வி: அரசியலுக்கு வருவதற்கான காரணம் என்ன?
பதில்: சுகாதாரத்துறை மீது மக்களுக்கு நம்பிக்கையில்லாத சூழல் நிலவுகிறது. அரசு மருத்துவமனைகளில் நானே நேரடியாக சென்று பார்த்திருக்கிறேன், பல மருத்துவமனைகளின் அறுவைச்சிகிச்சை கூடப்பகுதியில் நோயாளிகளுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அளவுக்கு அஜாக்கிரதை செயல்பாடுகள் தான் உள்ளன. பல இடங்களில் காலாவதி மருத்துகள் விற்பனை செய்வதை கண்டு அதிர்ந்தேன். சமூக அவலங்களை இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இது போன்ற நிகழ்வுகளை தனி ஆளாக இருந்துகொண்டு மாற்றுவது என்பது இயலாத காரியம் . அதற்கு ஒரு அமைப்புத் தேவை. ஆகையால் அரசியல் அதற்கு ஒரு சரியான தளமாக இருக்கும் என நினைக்கிறேன்.
கேள்வி: சுகாதாரத்துறை தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடிதம் எழுதுயிருந்தீர்கள்.. அதற்கு அவரிடம் இருந்து பதில் கிடைத்ததா?
பதில்: இல்லை..இதுவரை எனது கடிதத்துக்கு பிரதமரிடம் இருந்தோ, பிரதமர் அலுவலகத்தில் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. அதற்காக அவர் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை. சிறிய வருத்தம் மட்டும் உள்ளது.
கேள்வி: தமிழக அரசின் செயல்பாடு எப்படி இருக்கிறது?
பதில்; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த விமர்சனமும் கிடையாது. அரசின் செயல்பாடுகளை தொடர்ந்து கவனித்துக் கொண்டு தான் இருக்கிறேன். சுகாதாரத்துறை மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்பதை இந்தப் பேட்டி வாயிலாக அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கோரிக்கையாக வைக்கிறேன்.
கேள்வி: அரசியலுக்கு வருவது என முடிவு எடுத்துவிட்டீர்கள்.. தனிக்கட்சியா? ஏதேனும் ஒரு கட்சியில் இணைவீர்களா?
பதில்: இந்தக் கேள்விக்கு இப்போதைக்கு என்னால் பதில் கூறமுடியாது. நான் அரசியலுக்கு வருவது உறுதி. ஆனால் தனிக்கட்சியா.. அரசியல் கட்சியில் இணைவேனா என்பதை உடனே கூறமுடியாது.
கேள்வி: உங்கள் அரசியல் பிரவேச முடிவை, தந்தை சத்யராஜ் எப்படி பார்க்கிறார்?
பதில்: எனது தந்தை சத்யராஜ் என்னை தைரியமிக்க பெண்ணாக வளர்த்துள்ளார். பெண்ணியத்தையும், தைரியத்தையும் ஊட்டி அவர் என்னை ஆளாக்கியுள்ளார். அதனால் அவர் நிச்சயம் குறுக்கீடே செய்யமாட்டார். அவர் எங்கள் வீட்டில் உள்ள எல்லோரையும் சுயமாக சிந்தித்து சுதந்திரமாக செயல்ப அனுமதி அளித்துள்ளர்.
கேள்வி: உங்கள் தந்தை சத்யராஜ் பெரியாரிஸ்ட்; நீங்கள்?
பதில்: பெரியாரிஸ்ட், கம்யூனிஸ்ட் ஆகிய இரண்டு கொள்கைகளும் பிடிக்கும்.. நல்லகண்ணு நான் மதிக்கும் தலைவர்களில் முதன்மையானவர்.
வாங்க திவ்யா வாங்க.. மக்கள் காத்திருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications