2 ஆண்டு சிறை.. ராகுல் காந்திக்கு கமல்ஹாசன் கொடுத்த ஊக்கம்.. அதிகரிக்கும் நெருக்கம்..என்ன சொன்னார்?
சென்னை: மோடி பெயர் சர்ச்சை தொடர்பான வழக்கில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து இன்று உத்தரவிட்டது. இந்நிலையில் தான் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ராகுல் காந்திக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி இந்தியாவின் பல இடங்களுக்கு சென்று தீவிர பிரசாரம் செய்தார்.
கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்று உரையாற்றினார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியை அவர் விமர்சனம் செய்தார்.

அவமதிப்பு வழக்கு
இந்த வேளையில் பிரதமர் நரேந்திர மோடியின் ‛மோடி' என்ற பெயரை வைத்து சில கருத்துகளை தெரிவித்தார். இது பிரதமர் நரேந்திர மோடியை அவமதிக்கும் வகையில் இருப்பதாக சர்ச்சை எழுந்தது. அதாவது வங்கியில் கடன் வாங்கியும், மோசடி செய்தும் வெளிநாட்டில் தங்கியுள்ளவர்கள் பற்றி அவர் குறிப்பிட்டு பேசியேபோது எப்படி அனைத்து திருடர்களும் 'மோடி' என்ற பெயரை வைத்துள்ளதாக தெரிவித்தார். ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு எதிராக குஜராத் பாஜக எம்எல்ஏ புனரேஷ் மோடி அவமதிப்பு வழக்கு தொடுத்தார்.

2 ஆண்டு சிறை
குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில் ராகுல் காந்தி குற்றவாளி எனக்கூறிய நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. அதன்பிறகு அவருக்கு ஜாமீனும் வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி மேல்முறையீடு செய்ய உள்ளார்.

கமல்ஹாசன் ஆதரவு
இந்நிலையில் தான் ராகுல் காந்தி மீது உள்நோக்கத்துடன் வழக்கு தொடரப்பட்டு பாஜக சிக்க வைப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூறி வருகின்றனர். மேலும் ராகுல் காந்திக்கு ஆதரவாக ஒவ்வொருவரும் பேசி வருகின்றனர். இந்நிலையில் தான் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ராகுல் காந்திக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் ஆதரவு தெரிவித்துள்ளார்.

என்ன சொன்னார் கமல்
இதுபற்றி கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛ராகுல்ஜி, இந்த நேரத்தில் நான் உங்களுடன் நிற்கிறேன்! நீங்கள் அதிக சோதனை நேரங்களையும் நியாயமற்ற தருணங்களையும் பார்த்திருக்கிறீர்கள். நமது நீதித்துறை அமைப்பு நீதி வழங்குவதில் உள்ள பிறழ்வுகளை சரிசெய்யும் அளவுக்கு வலுவானது. சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பின் மீதான உங்கள் மேல்முறையீட்டில் உங்களுக்கு நீதி கிடைக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்! சத்யமேவ ஜெயதே!!'' என கூறி ஆதரவு வழங்கியுள்ளார்.

காங்கிரசுடன் தொடரும் நெருக்கம்
கமல்ஹாசன் சமீபகாலமாக காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கம் காட்டி வருகிறார். டெல்லியில் நடந்த பாரத் ஜோடோ யாத்திரையில் கமல்ஹாசன் பங்கேற்றார். அதன்பிறகு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவு அளித்தார். மேலும் அவரை ஆதரித்து பிரசாரமும் செய்தார். இந்நிலையில் தான் ராகுல் காந்தியின் பெயரை ட்விட்டரில் டேக் செய்து கமல்ஹாசன் அவருக்கு ஆதரவு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications