மாஜி எம்எல்ஏ எம்.கே. பாலன் கொலை வழக்கு- அதிமுகவினர் உட்பட 16 பேர் சரணடைய சுப்ரீம் கோர்ட் உத்தரவு
சென்னை: முன்னாள் எம்.எல்.ஏ. எம்.கே. பாலன் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அதிமுகவினர் உட்பட 16 பேரும் ஒருவாரத்தில் சரணடைய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏவாக இருந்தவர் எம்.கே. பாலன். பின்னர் அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்தார். திமுகவில் அக்கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினராகவும் இருந்தார்.

2000-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபயிற்சிக்கு சென்ற எம்.கே. பாலன் மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். இது தொடர்பான வழக்கு தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பல ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த வழக்கில் திருப்புமுனை ஏற்பட்டது. மொத்தம் அதிமுக நிர்வாகிகள் உட்பட 16 பேர் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டனர். பணத்துக்காக எம்.கே.பாலனை கடத்தி கொலை செய்து பின்னர் எரித்துவிட்டதாக அவர்கள் வாக்குமூலம் கொடுத்தனர்.
இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றம் 2004-ம் ஆண்டு 16 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 2007-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றமும் அனைவரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது.
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டோர் மேல்முறையீடு செய்தனர். இதனை விசாரித்த உச்சநீதிமன்மும் ஆயுள் தண்டனையை உறுதி செய்த நீதிபதிகள் அனைவரையும் 3 வாரங்களுக்குள் சரணடையவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் சோமசுந்தரம் என்ற குற்றவாளி கால அவகாசம் கோரி மற்றொரு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதனை நிராகரித்த உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனை பெற்ற 16 பேரும் ஒருவாரத்தில் சரணடைய வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications