மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள நபருக்கு.. தமிழக பாஜகவில் முக்கிய பதவி! யார் இந்த ஹரிஷ்?
சென்னை: தமிழக பாஜகவில் விளையாட்டு பிரிவு மாநிலச் செயலாளர் நியமனம் குறித்து சர்ச்சை எழுந்துள்ள நிலையில், இது குறித்து எஸ். அமர் பிரசாத் ரெட்டி சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜகவில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட நியமனங்களில் ஒன்று சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. அதாவது சமீபத்தில் தமிழ்நாடு பாஜக விளையாட்டு பிரிவு மாநிலச் செயலாளராக ஹரிஷ் என்பவர் நியமிக்கப்பட்டார்.
அவரை சுற்றித் தான் சர்ச்சை கிளம்பி உள்ளது. இந்த விவகாரம் பேசுபொருள் ஆகி உள்ள நிலையில், இது குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்!

ஹரிஷ்
கடந்த இரு வாரங்களுக்கு முன்பு, பொதுமக்களிடம் இருந்து பணம் வசூலித்துவிட்டு ஏமாற்றியதாக பாஜகவின் கே.ஹரிஷ் என்பவர் மீது மாநிலப் பொருளாதார குற்றப்பிரிவினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்தச் சூழலில் தான், அவர் தமிழக பாஜகவின் விளையாட்டு மற்றும் மேம்பாட்டுப் பிரிவு மாநிலச் செயலாளராக நியமிக்கப்பட்டார். பல கோடி ரூபாய் மோசடி செய்ததாகப் பொருளாதார குற்றப்பிரிவினர் வழக்குப்பதிவு செய்துள்ள தங்க வர்த்தக நிறுவனத்தின் இயக்குநர்களில் இந்த ஹரிஷும் ஒருவர் ஆவார்.

பொறுப்பு
கடந்த ஜூன் 2ஆம் தேதி ஹரிஷ் உள்ளிட்ட சில நிர்வாகிகளின் நியமனம் குறித்து தமிழக பாஜகவின் விளையாட்டு மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் மாநிலத் தலைவர் எஸ். அமர் பிரசாத் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். ஆனால், ஹரிஷ் அப்போதே தலைமறைவாகத் தான் இருந்தார். கடந்த மே 24 முதல் ஹரிஷ் உட்பட மூன்று பேரை மாநிலப் பொருளாதார குற்றப்பிரிவினர் தேடி வந்தனர்.

அமர் பிரசாத் ரெட்டி
இருப்பினும், மாநிலப் பொருளாதார குற்றப்பிரிவினரின் இந்த நடவடிக்கையை "அரசியல் பழிவாங்கல்" என்றே எஸ். அமர் பிரசாத் ரெட்டி குறிப்பிடுகிறார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "அவர் (ஹரீஷ்) கட்சி நடவடிக்கைகளில் தீவிரமாகப் பங்கேற்று இருந்தார். பாஜகவுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் இருந்து அவர் பல்வேறு விளையாட்டு வீரர்களை அணி திரட்டினார். அவரை முடக்கும் வகையிலேயே அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தெரியாது
ஹரிஷை எங்களாலும் அணுக முடியவில்லை. அதேபோல கட்சி பதவியையும் அவர் இதுவரை ஏற்கவில்லை. இந்த விவகாரத்தில் ஹரிஷ் விளக்கம் அளித்த பிறகு பாஜக உரிய நடவடிக்கை எடுக்கும். அடிப்படையில் ஹரிஷ் ஒரு விளையாட்டு வீரர். அவர் நீண்ட காலத்திற்கு முன்பே கட்சியில் சேர்ந்து இருந்தார். ஹரிஷின் தொழில் குறித்து எல்லாம் எங்களுக்கு எதுவும் தெரியாது.

விளையாட்டு வீரர்
ஒரு விளையாட்டு வீரராக அவர் மகத்தான சாதனைகளைச் செய்து இருந்தார். இதன் காரணமாகவே அவர் கட்சியில் சேர்க்கப்பட்டார். இதன் அடிப்படையிலேயே அவருக்குக் கட்சி பொறுப்பும் வழங்கப்பட்டது. ஹரிஷ் மத்திய மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தமிழக அமெச்சூர் கிக் பாக்ஸிங் சங்கத்தின் மாநிலத் தலைவராக உள்ளார். இதன் அடிப்படையிலேயே அவருக்கு மாநிலச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது" என்றார்.












Click it and Unblock the Notifications