எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கான சேர்க்கை நடைபெறாதது ஏன்?.. தமிழக அரசு விளக்கம்
சென்னை: நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையின் போது எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு சேர்க்கை நடத்தப்படாது என தமிழக அரசு கூறியதற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில் அதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை விளக்கமளித்துள்ளது.
தமிழகத்தில் 2,381 அங்கன்வாடி மையங்களை அரசு பள்ளிகளுடன் இணைத்து கடந்த 2019-20ஆம் கல்வியாண்டு முதல் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த குழந்தைகளுக்கு பாடம் நடத்த தொடக்கக்கல்வி இயக்ககம் சார்பில் ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.
இந்நிலையில், நடப்பு கல்வியாண்டில் கல்வித் துறை சார்பில் 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படாது என்று தகவல்கள் வெளியாயின.
பள்ளி மாணவிகளின் வாழ்க்கையில் விளையாடிய கொரோனா.. தமிழகத்தில் 511 பேருக்கு குழந்தை திருமணம்
பள்ளிக் கல்வித் துறை
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கமளித்துள்ளார். அவர் கூறுகையில் அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் நிறுத்தப்படவில்லை. அரசு பள்ளியில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இருந்த எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் சமூகநலத் துறையின் கீழ் இயங்கும் அங்கன்வாடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அங்கன்வாடி மையம்
எனவே அருகில் உள்ள அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளை சேர்த்துக்கொள்ளலாம் என்றும் இதில் பணியாற்றிய ஆசிரியர்கள் ஏற்கனவே இருந்தபடி 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை முழுமையாக ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தெரிவித்திருந்தார்.
தொடக்கக் கல்வி இயக்குநர்
இந்நிலையில், தொடக்க கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மழலையர் வகுப்புகளில் உள்ள குழந்தைகளை கையாள்வதில் சிக்கல், புரிதலின்மையே நீடித்தது. எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளை கையாள நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் இடைநிலை வகுப்புகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
ஆசிரியர்கள் நியமனம்
2013-14க்கு பின், ஆசிரியர்களை புதிதாக நியமிக்காததால், ஓய்வுபெறும் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தன. 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்புகளை கையாள அதிக ஆசிரியர்கள் தேவைப்படுவதால் அவர்கள் தொடக்கப் பள்ளிகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
அங்கன்வாடி மையங்களில்
எனவே, அங்கன்வாடி மையங்களில் ஏற்கெனவே இருந்த குழந்தைகளுக்கு, முந்தைய நடைமுறையைப் பின்பற்றி இந்த ஆண்டு முதல், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் அங்கன்வாடி உதவியாளர்கள் மூலம் தற்காலிக கற்றல் செயல்பாட்டினை மேற்கொள்ளலாம் என முடிவெடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.