மழை காலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை இனி எப்படி.. குழப்பங்களுக்கு தீர்வு .. பள்ளி கல்வித்துறை தகவல்
சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் சென்னையையொட்டிய சில பகுதிகள் வருகின்றன. இந்நிலையில் சென்னையில் மழைக்காக விடுமுறை விடப்பட்ட போது, சென்னையின் புறநகர் பகுதிகளாக செங்கல்பட்டு பகுதிக்கு விடுமுறை அறிவிக்கப்படாததால் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடும் குழப்பங்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மழை காலங்களின்போது, பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது குறித்த முடிவை அந்தந்த மாவட்ட ஆட்சி தலைவர்கள் தான் நிலைமைய பொறுத்து அறிவிக்கிறார்கள். அந்தவகையில் வானிலை ஆய்வு மையத்தின் அறிவுறுத்தலின் பேரில், எந்தெந்த மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கான வாய்ப்பு இருக்கிறது? என்ற முன்னெச்சரிக்கையின்படியே விடுமுறை அறிவிக்கிறார்கள்.

அவ்வாறு விடுமுறை விடப்படும் நாட்களை ஈடுசெய்யும் வகையில் சனிக்கிழமை அன்று வகுப்புகள் நடத்தி விடுமுறையை ஈடு செய்ய வேண்டும். அதன்படியே சனிக்கிழமை பள்ளிகள் செயல்படவும் செய்கின்றன. வ இந்த நிலையில் சில மாவட்டங்களில் மழை காலங்களில் விடுமுறை விடுவதில் சில குழப்பங்கள் ஏற்படுகிறது.
வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், நேற்று முன்தினம் சென்னையில் மிக கனமழை பெய்தது. நேற்று காலையும் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஆனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை.கோவிலம்பாக்கம் தொடங்கி குரோம்பேட்டை, பல்லாவரம், தாம்பரம், கூடுவாஞ்சேரி, சென்னை ஓஎம்ஆர் சாலை பகுதிகள் செங்கல்பட்டில் வருகின்றன. அங்குநேற்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படவில்லை. கனமழை பெய்த போதும் விடுமுறை விடாததால் குழப்பம் ஏற்பட்டது.
இது ஒருபுறம் எனில், அண்மையில் மயிலாடுதுறை, நாகை மாவட்டத்தில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் விடுமுறை பற்றி முடிவெடுக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதால் மாணவ-மாணவிகள், பெற்றோர் குழப்பத்துக்குள்ளானார்கள். இந்த குழப்பங்களுக்கெல்லாம் விரைவில் தீர்வு காணும் வகையில் பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க இருப்பதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே மழைகாலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு 7 கட்டுப்பாடுகள் பள்ளி கல்வித்துறை விதித்துள்ளது. 2018 ஆம் ஆண்டு முதலே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளின் படியும், மழையின் தீவிரத்தை பொறுத்துமே மாவட்ட ஆட்சியர் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கிறார்கள். அந்த ஏழு கட்டுப்பாடுகளை பற்றி இப்போது பார்ப்போம்.
1. தொடர் கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் தேங்கி நின்றாலோ, போக்குவரத்து பாதிக்கப்பட்டாலோ மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். மிதமான மழைக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க கூடாது.
2. மழை நிலவரத்தை ஆராய்ந்து 3 மணி நேரத்திற்கு முன்பாகவே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்.
3. முதன்மை கல்வி அலுவலர்கள் மழையின் தீவிரத்தை ஆராய்ந்து, பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு பரிந்துரைக்க வேண்டும்.
4. மழையின் தீவிரத்தை உணர்ந்து அதிகம் பாதிக்க கூடிய குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்க வேண்டும். மாவட்டம் முழுவதற்கும் விடுமுறை அளிப்பதை தவிர்க்க வேண்டும்.
5. கோயில் திருவிழாக்களின் போது அளிக்கப்படும் விடுமுறையை வேறொரு நாளில் பள்ளி வைத்து ஈடு செய்ய வேண்டும்.
6. மழை காரணமாக அளிக்கப்படும் விடுமுறைகளை சனிக்கிழமைகளில் பள்ளி வைத்து ஈடு செய்ய வேண்டும். இதன் மூலம் மாணவர்கள் அனைத்து பாடங்களையும் கற்க முடியும்.
7. மழையால் பாதிக்கப்பட்டு பள்ளிகளில் மழைநீர் தேங்கியிருந்தால், உடனடியாக மழைநீர் வெளியேற்றப்பட்டு போதுமான வசதிகள் செய்து தரப்படும்.












Click it and Unblock the Notifications