செப். 1 முதல் பள்ளி, கல்லூரி திறப்பு உறுதி.. பாதுகாப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்ட தமிழக அரசு
சென்னை: தமிழ்நாட்டில் நாளை (செப்டம்பர் 1) பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் கொரோனா ஊரடங்கு உச்சமடைந்தது. அப்போது நிலைமையைக் கட்டுப்படுத்து ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. தற்போது வரும் செப். 15ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

முதல்வர் ஆலோசனை
அதேநேரம் வரும் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைத் திறக்கவும் தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. இது தொடர்பாகத் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் தமிழ்நாட்டில் நாளை (செப்டம்பர் 1) பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு
பள்ளிகளில் 9 முதல் 12ஆம் வகுப்புகள் வாரத்தில் 6 நாட்களும் செயல்படும். வகுப்பறைகளில் தலா 20 மாணவர்கள் மட்டுமே அமர அனுமதிக்கப்பட வேண்டும். கொரோனா காரணமாக அனைத்து பாடங்களையும் நடத்தி முடிக்க இயலாத சூழல் நிலவுவதால் பாடத்திட்டங்களை 50 விழுக்காடு வரை குறைக்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் கிருமி நாசினி, கைகழுவத் தண்ணீர் உள்ளிட்டவை ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.

கொரோனா அறிகுறி உள்ள மாணவர்களுக்கு அனுமதி இல்லை
கொரோனா அறிகுறி உள்ள மாணவர்கள் அல்லது ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அனுமதிக்கக் கூடாது. மாணவர்களுக்குச் சத்து மாத்திரை, நோய் எதிர்ப்புச் சக்திக்குத் தேவையானவற்றை வழங்க வேண்டும். கொரோனா தடுப்பூசி செலுத்தத் தகுதியான மாணவர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். பள்ளி வளாகத்தைச் சுத்தமாக வைத்திருப்பதைப் பள்ளி நிர்வாகம் அல்லது உள்ளாட்சி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். பள்ளிகளில் உள்ள மேஜைகள், கேண்டீன், கழிவறைகள், அனைத்து வகுப்பறைகள், நூலகம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்திருக்க வேண்டும்.

பள்ளி விழாக்கள் தவிர்க்க வேண்டும்
பள்ளி வாகனங்களைக் கிளம்புவதற்கு முன்பாக கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். பள்ளிகளில் ஒவ்வொரு இருக்கைக்கும் நடுவே குறைந்தது 6 அடி இடைவெளி இருக்க வேண்டும். ஆசிரியர்கள் அறை, அலுவலகம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். பள்ளியின் கழிவறைக்கு வெளியே, கைக்கழுவுமிடம் உள்ளிட்ட பகுதிகளில் சமூக இடைவெளியைப் பின்பற்றி வட்டம் போடப்பட்டிருக்க வேண்டும். பள்ளிகளில் விழாக்கள் அல்லது நிகழ்ச்சிகள் நடத்துவதைத் தவிர்க்க வேண்டும். கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இருக்கும் ஆசிரியர்களோ மாணவர்களோ பள்ளிகளுக்கு வர அனுமதி இல்லை.

கல்லூரிக்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்
செப்டம்பர் 1ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படுவதால், ஒரு வாரத்திற்கு முன்பே கல்லூரி வளாகத்தை சுத்தப்படுத்தியாக வேண்டும். கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ள கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடரும். மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் கட்டாயம் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். தடுப்பூசி செலுத்தாத பேராசிரியர்கள், பணியாளர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவர்.

கொரோனா வேக்சின்
தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு அந்தந்த கல்லூரிகளிலேயே தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட வேண்டும். மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்லூரிகளுக்கு வர அவசியமில்லை. நோய்த்தொற்று உள்ள மாணவர்களைக் கண்டறிந்தால், அவருடன் தொடர்புடைய அனைவருக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும். கல்லூரி நுழைவு வாயில்களில் கண்காணிப்புக் குழு ஒன்றை அமைத்து, பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்துக் கண்காணிக்க வேண்டும். கல்லூரி வளாகத்தில் பயன்படுத்தப்படாத பிளாஸ்டிக் தேநீர் குவளைகள், டயர்கள் உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.












Click it and Unblock the Notifications