பெற்றோர்கள் இனி ஹாப்பி.. நாளை முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு! ஏற்பாடுகள் அனைத்தும் தயார்..!
சென்னை: 2023-2024 கல்வியாண்டு முடிந்து 2024-2025ஆம் கல்வியாண்டு நாளை தொடங்குகிறது. கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது. இதை அடுத்து பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோரும் மாணவர்களை வரவேற்க ஆசிரியர்களும் தயாராகி வருகின்றனர்.
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆயிரக்கணக்கான பள்ளிகள் தமிழகத்தில் இயங்கி வருகிறது. அரசு தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என சுமார் 20 ஆயிரம் பள்ளிகளில் லட்சக்கணக்கான மாணவர்கள் பயில்கின்றனர்.

பொதுவாக கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் ஒன்றாம் தேதியே பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் இந்த முறை கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது. மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை விடப்பட்டிருந்தாலும் ஜூன் முதல் வாரத்தில், அதாவது ஜூன் 4-ம் தேதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதிலும் ஆசிரியர்கள் ஈடுபட்டதால் பள்ளிகள் திறப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் 2023-2024 கல்வியாண்டு முடிந்து 2024-2025ஆம் கல்வியாண்டு நாளை தொடங்குகிறது. இதனையடுத்து தமிழகத்தில் நாளை பள்ளிகள், அரசு கலைக் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளது. இதையடுத்து பள்ளி கல்லூரிகள் மாணவர்களை வரவேற்க தயாராகி இருக்கின்றன. பள்ளி வளாகங்கள் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு பள்ளி தொடங்கும் நாளிலேயே இனிப்பு பொங்கல் வழங்க அதிகாரிகள் உத்தரவிட்டிருக்கின்றனர்.மேலும் 202425 ஆம் கல்வியாண்டுக்கான நாட்காட்டியை பள்ளி கல்வித்துறை நேற்று வெளியிட்டது.
பள்ளிகள் திறக்கப்படும் திங்கட்கிழமை அன்று அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா புத்தகங்கள் நோட்டு புத்தகங்கள் ஆகியவை வழங்கப்பட இருக்கின்றன அதுமட்டுமல்லாமல், புத்தகப்பை. காலணிகள், காலேந்திகள் மற்றும் கம்பளிச்சட்டை மழைக்கோட்டு. பூட்ஸ் மற்றும் சீருடைகள், காலுறைகள், வண்ணப்பென்சில்கள், வண்ணக்கிரையான்கள், மிதிவண்டிகள், கணிதஉபகரணப் பெட்டிகள் மற்றும் புவியியல் வரைபடம் ஆகியவைகளும் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளன.
புத்தகங்கள் உள்ளிட்ட அனைத்தும் குடோன்களில் இருந்து ஏற்கனவே பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட நிலையில் அவை தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கின்றன. தொடர்ந்து ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அரசின் நலத்திட்ட பொருட்களை வழங்க இருக்கின்றனர். பள்ளிகள் திறக்கும் நாள் அன்று பள்ளிக்குச் செல்லும் ஏழை எளிய மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் பேருந்து பயண அட்டை தொடர்பாக எந்த கவலையும் கொள்ளத் தேவையில்லை. புதிய இலவச பேருந்து பயண அட்டைகள் வழங்கப்படும் வரை ஏற்கனவே உள்ள பழைய அட்டையை பயன்படுத்தி பேருந்தில் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என போக்குவரத்து துறை ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள நாட்காட்டியில்,"கோடை விடுமுறை முடிந்து அனைத்து வகுப்புகளுக்கும் ஜூன் 10-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். இதுதவிர 1 முதல் 12-ம் வகுப்புகளுக்கான காலாண்டு மற்றும் முதல் பருவத் தேர்வு செப்டம்பர் 20 முதல் 28-ம் தேதி வரை நடைபெறும். அதன்பின் செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை காலாண்டு விடுமுறை வழங்கப்படும்.
அதன்பின் அரையாண்டு மற்றும் 2-ம் பருவத்தேர்வு டிசம்பர் 16 முதல் 23-ம் தேதி வரை நடத்தப்படும். தொடர்ந்து டிசம்பர் 24-ல் தொடங்கி ஜனவரி 1-ம் தேதி வரை மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை வழங்கப்படும். அதேபோல், 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 9 முதல் 17-ம் தேதி வரை முழு ஆண்டுத் தேர்வுகள் நடத்தப்படும்.
பள்ளி வேலை நாட்கள் ஏப்ரல் 27-ம் தேதியுடன் நிறைவு பெறும். அதன்பின் கோடை விடுமுறை ஏப்ரல் 28-ம் தேதி முதல் வழங்கப்படும். மொத்த பள்ளி வேலை நாட்கள் 220 ஆக இருக்கும்" என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதில் 10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு குறித்த அறிவிப்பு இல்லை.












Click it and Unblock the Notifications