தாய்மொழியில் திட்டுங்கள்! தனித்தமிழ் பேசுபவரை விசித்திர விலங்காய் பார்க்காதீர்- வைரமுத்து அறிவுரை
சென்னை: தயவு செய்து தாய்மொழியில் திட்டுங்கள் என கவிப்பேரரசு வைரமுத்து அறிவுறுத்தியுள்ளார். இன்று உலக தாய்மொழித் திருநாளையொட்டி அவர் கவிதை நடையில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:
இன்று
உலகத் தாய்மொழித் திருநாள்
மொழி என்பது
ஒலிக்கருவி அல்ல;
உயிரி
ஏன் காக்க வேண்டும்
மொழியை?
அது
காலம்சேமிக்கப்பட்ட
கலம்
மரபு - வரலாறு
மருத்துவம் - பண்பாடு
கலை - இலக்கியம்
விழுமியம் - பெருமிதம்
முதலானவற்றைத்
தலைமுறைகளுக்குக் கடத்தும்
ஆவண வாகனம்
ஒரு மொழி வாழ்வது
அது பேசப்படுவதால்தான்
ஒரு மொழிபேசும்
கடைசி மனிதனின் குழியில்
மொழியும் சேர்த்தே
புதைக்கப்படுகிறது
தமிழர்கள்
நிறையப் பிள்ளை பெறுங்கள்
அருள்கூர்ந்து
தாய்மொழியில் பேசுங்கள்;
எழுதுங்கள்
தயவுசெய்து
தாய்மொழியில் திட்டுங்கள்
தனித்தமிழில்
உரையாடுகிறவனை
விசித்திர விலங்காய்ப்
பார்க்காதீர்கள்;
அவன்தான் மொழியின்
கடவுக் கடவுள்
அதிகார மையங்களில்
புழங்காமல்,
அரசியலின் கதகதப்பு
இல்லாமல்,
தாய்மொழி வழிக்கல்வி
தழைக்காமல்,
அறிவியல் கருவிகளை
ஆளாமல்
தழைக்காது தாய்மொழி
ஒவ்வொரு
தேசிய இனத்துக்கும்
இது அச்சடித்த எச்சரிக்கை
தாய்மொழி புழங்குக;
தாய்மொழி வழங்குக;
எவ்வினத்திலும்
தாய்மொழியே விளங்குக
இவ்வாறு வைரமுத்து தெரிவித்துள்ளார்.
தாய்மொழியின் அவசியத்தை உணர்த்தும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21-ம் தேதி சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பன்மொழி கலாசாரத்தை அனுசரிக்கவும், ஆதரிக்கவும் சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது.
ஸ்டாலின் வாழ்த்து
முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், தமிழே நீ வாழ்ந்திடு! இன்று உலகத் தாய்மொழிகள் நாள்! ஏராளமானோர் உயிர்கொடுத்துக் காத்த நம் உயிர்நிகர் தமிழ்மொழியை எத்தனை சிறப்புகள் சொல்லி அழைத்தாலும் "தமிழே" என்று அழைத்திடும்போது கிடைத்திடும் இன்பம் மகத்தானது. தலைவர் கலைஞரின் இந்த வரிகளைப் பாடலாக்கிய அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். அவர்களுக்கு என் நன்றி!
நம் தமிழைக் காத்து - அதை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கொண்டு சேர்த்து, செழிப்போடு வாழவைக்க வேண்டியது உலகெங்கும் வாழும் அனைத்துத் தமிழர்களின் பொறுப்பு! என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications