2 மாத மின் கட்டணத்தை பேரிடர் நிவாரணமாக அரசே ஏற்க வேண்டும்... எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்
சென்னை: தமிழகத்தில் இரண்டு மாத மின் கட்டணத்தை பேரிடர் நிவாரணமாக அரசே ஏற்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.
மேலும் ஊரடங்கு காரணமாக வேலை இல்லாமல் வருமானமின்றி தவித்து வந்த மக்களுக்கு இத்தகைய அதிகப்படியான மின்கட்டணம் மிகப்பெரும் பாரமாக அமையும் என சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

மின் வாரியம்
''கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவு காரணமாக, வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பிப்ரவரி-மார்ச் மாத மின் நுகர்வு கணக்கிடப்படாமல் முந்தைய மாத கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு செய்தது. தொடர்ந்து தற்போது ஊரடங்கு தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் பிப்ரவரி-மார்ச் மற்றும் மார்ச்-ஏப்ரல் மாதங்களுக்கான மின்நுகர்வு கணக்கிடப்பட்டு வருகின்றது''.

இரண்டு மாதங்கள்
''கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து மக்களும் வீடுகளில் முடங்கிய காரணத்தாலும், சுட்டெரிக்கும் வெயில் காரணமாகவும் தொலைக்காட்சி, மின்விசிறி உள்ளிட்ட மின்சாதனங்கள் பயன்பாடு அதிகளவில் இருந்த காரணத்தாலும், வழக்கத்திற்கு மாறாக மின் பயன்பாட்டு அளவு அதிகரித்து மின் கட்டணமும் அதிகரித்துள்ளது.''

குற்றச்சாட்டு
''மேலும், பல்வேறு இடங்களில் மின் நுகர்வு அளவீடு செய்வதில் மின்சார வாரியம் அறிவித்த முறைக்கு மாற்றமாக மொத்த நுகர்வை இரண்டாக பிரித்து கணக்கீடு செய்யாமலும், ஏற்கனவே செலுத்திய தொகைக்கான மின் யூனிட்டை கழிக்காமல் தொகையை மட்டும் கழித்தும் மின் நுகர்வு அளவீடு கணக்கீடு செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன''.

தள்ளுபடி செய்க
''ஊரடங்கு காரணமாக வேலை இல்லாமல் வருமானமின்றி தவித்து வந்த மக்களுக்கு இத்தகைய அதிகப்படியான மின்கட்டணம் என்பது மிகப்பெரும் பாரமாக அமைந்துவிடும். கொரோனா ஊரடங்கு நடவடிக்கையால் மக்களுக்கு ஏற்பட்ட வருமான இழப்பு ஆகியவற்றை கவனத்தில்கொண்டு இரண்டுமாத மின் கட்டணத்தை கொரோனா பேரிடர் நிவாரணமாக கட்டணத்தை ஏற்றுக்கொள்ள தமிழக அரசு முன்வர வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்''.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications