மநீம உடன் பேசிக்கொண்டே அமமுக கூட்டணியில் இணைந்த எஸ்டிபிஐ - 6 இடங்களுக்கு ஒப்பந்தம்
அமமுக கூட்டணியில் இணைந்துள்ளது எஸ்டிபிஐ கட்சி. சட்டசபைத் தேர்தலில் போட்டியிட அந்த கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் அமமுக கூட்டணியில் இணைந்துள்ள எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அந்த கட்சிக்கு ஆலந்தூர், ஆம்பூர், திருச்சி மேற்கு, திருவாரூர், மதுரை மத்திய தொகுதி, பாளையங்கோட்டை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. அதிமுக, திமுக கூட்டணிக் கட்சிகளைத் தவிர்த்து, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அமமுக என பல முனைப் போட்டி நிலவுகிறது. அமமுக உடன் பல கட்சிகள் கூட்டணி வைத்து போட்டியிடுகின்றன.

ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாதுல் முஸ்லிமின் (ஏஐஎம்ஐஎம்) கட்சியுடன் அமமுக கூட்டணி அமைத்துள்ளது. வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, சங்கராபுரம் ஆகிய 3 தொகுதிகளில் ஏஐஎம்ஐஎம் போட்டியிடுகிறது.
அதேபோன்று, அமமுக கூட்டணியில், கோகுல மக்கள் கட்சிக்கும், மருது சேனை சங்கத்துக்கும் தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அமமுக கூட்டணியில் விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி, மக்களரசு கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அமமுக கூட்டணியில் இணைந்துள்ள எஸ்டிபிஐ கட்சிக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும், சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா-தமிழ்நாடு(SDPI) கட்சியும் கூட்டணி ஒப்பந்தம் செய்துள்ளதாக டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
2021 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றப் பொதுத்தேர்தல் : அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும், சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா-தமிழ்நாடு(SDPI) கட்சியும் கூட்டணி ஒப்பந்தம். pic.twitter.com/PG7z5tRnN0
— TTV Dhinakaran (@TTVDhinakaran) March 11, 2021
எஸ்டிபிஐ கட்சி சட்டசபைத் தேர்தலில் ஆலந்தூர், ஆம்பூர், திருச்சி மேற்கு, திருவாரூர், மதுரை மத்திய தொகுதி, பாளையங்கோட்டை தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஒப்பந்தம் கையெழுத்தான உடன் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்டிபிஐ கட்சியின் துணைத் தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி, மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் அதிகாரப்பூர்வமாக பேசி ஒப்பந்தம் எதுவும் கையெழுத்தாகவில்லை என்று கூறினார்.
செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த தெகலான் பாகவி, திமுக மட்டுமே பாஜகவை எதிர்க்கும் கட்சியல்ல ஏற்கனவே அவர்கள் பாஜக உடன் இணைந்து தேர்தலை சந்தித்தவர்கள்தான் என்று கூறினார். பாஜகவை எதிர்க்கும் கட்சி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்பதால் அந்த கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளதாகவும் கூறினார்.
நாளை வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ள நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதிப்பங்கீடு,வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு என தமிழக அரசியல் களம் பரபரப்பாக உள்ளது.












Click it and Unblock the Notifications