அண்ணாமலை “ப்ரூவ்” பண்ணிட்டாரு.. வகுப்புவாதம், வன்முறை, அடாவடி கட்சி பாஜக - நெல்லை முபாரக் காட்டம்
சென்னை: தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆரை தரம் தாழ்ந்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது கண்டிக்கத்தக்கது என எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்து இருக்கிறார்.
சில வாரங்கள் முன்பாக விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் காரை வழிமறித்த பாஜகவினர் கார் மீது செருப்பை கொண்டு வீசினர். இந்த சம்பவத்தால் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அமைச்சர் கார் மீது பாஜகவினர் காலணி வீசியது தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு பாஜகவை சேர்ந்த 10 பேரை கைது செய்தது. இந்நிலையில் அண்ணாமலை மற்றும் மதுரை புறநகர் மாவட்ட பாஜக தலைவர் சுசீந்திரன் ஆகியோர் செல்போனில் பேசியதாக ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது.
ஒப்புக்கொண்ட அண்ணாமலை
இந்நிலையில் அந்த ஆடியோ தன்னுடையது தான் என பாஜக அண்ணாமலை ஒப்புக்கொண்டார். "பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசியது தவறு தான். இது குறித்து நான் மதுரை புறநகர் நிர்வாகி உடன் பேசி இருந்தேன். நான் பேசியதாக வெளியிடப்பட்ட ஆடியோ உண்மைதான். அதில் திமுகவினர் ஒரு சில வார்த்தைகளை நீக்கியும் சேர்த்தும் வெளியிட்டுள்ளனர். அந்த ஆடியோவை முழுவதுமாக வெளியிட வேண்டும்" என கூறினார்.
பிடிஆர் ட்வீட்
இந்த நிலையில் பழனிவேல் தியாகராஜன் ட்விட்டரில் அண்ணாமலை பற்றி ஒருபதிவை வெளியிட்டு உள்ளார். அதில்,
"நான் ஏன் ஆடு (Emoji) பெயரை சொல்ல மாட்டேன்?
1. வீரமரணம் அடைந்தவரின் உடலை வைத்து விளம்பரம் தேடுவது.
2. தேசியக் கொடி இருந்த காரின் மீது செருப்பு வீச வைப்பது.
3. அப்பட்டமாக பொய் சொல்வது.
4. அரசியல் காரணத்துக்காக மக்கள் உணர்வுகளை தூண்டுவது.
அடு போன்ற அற்பமானவர்களின் மனநிலை குறித்து உயர்நீதிமன்றமே கேள்வி எழுப்பியுள்ளது. இவர்கள் தமிழ் சமுதாயத்தின் சாபக்கேடு." என்று பதிவிட்டு உள்ளார்.
அண்ணாமலை காட்டம்
இதையடுத்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை காட்டமாக விமர்சித்து பதிவிட்டு இருக்கிறார். அதில், "பிடிஆர், உங்கள் பிரச்சனை இதுதான். முன்னோர்களின் இனிஷிலுடன் வாழும் உங்களாலும் உங்கள் கூட்டாளிகளாலும் சுயமான உருவான விவசாயியின் மகனை ஒரு நபராக ஏற்க முடியாது. பெரிய பரம்பரையிலும் வெள்ளிக் கரண்டியிலும் பிறந்ததை தவிர்த்து இந்த ஜென்மத்தில் நீங்கள் பயனுள்ள எதையாவது செய்து இருக்கிறீர்களா?
செருப்புக்கு கூட ஈடில்லை
அரசியலுக்கும் நமது மாநிலத்துக்கும் நீங்கள் சாபக்கேடாக உள்ளீர்கள். பெரிய விமானங்களில் செல்லாத, வங்கிகளை இழுத்து மூடாத, முக்கியமாக சமநிலைகொண்ட அறிவை கொண்டு வாழும் எங்களைபோன்ற மக்கள் உள்ளார்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இறுதியாக ஒன்றை சொல்கிறேன். என் செருப்புகளின் அளவுக்கு கூட உங்களுக்கு தகுதியில்லை. உங்கள் அளவுக்கு தரக்குறைவாக நான் இறங்க மாட்டேன். எனவே கவலைப்பட வேண்டாம்." என்றார்.
நெல்லை முபாரக்
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக், "மதுரையில் தமிழ்நாடு நிதி அமைச்சர் கார் மீது செருப்பு வீசிய சம்பவத்திற்கு, பாஜக தலைவர் அண்ணாமலையின் தூண்டுதலே காரணமாக இருக்க முடியும் என்கிற நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவர்களின் குற்றச்சாட்டுக்கு, பதில் என்கிற பேரில் மிகவும் தரம் தாழ்ந்து பேசிய பாஜக தலைவர் அண்ணாமலையின் ஆணவப் பேச்சு கண்டிக்கத்தக்கது. வகுப்புவாதம், வன்முறை அடாவடி அரசியலை மட்டுமே மேற்கொண்டுவரும் கட்சியின் தலைவரிடமிருந்து இதுபோன்ற தரம் தாழ்ந்த கருத்துக்கள் தான் வெளிப்படும் என்பதை அண்ணாமலை நிரூபித்துள்ளார்." என்று குறிப்பிட்டு இருக்கிறார்.