மின் இணைப்புடன் ஆதார் எண்! மின்சார வாரியம் பிடிவாதம் பிடிக்கக் கூடாது! கடுகடுக்கும் எஸ்.டி.பி.ஐ.!
சென்னை: மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்களிடம் மின் கட்டணத்தை பெற்றுக்கொள்ள மறுப்பது கண்டிக்கத்தக்கது என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் விவகாரத்தில் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருவதாகவும் இதனால் மக்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
மின் கட்டணத்தை செலுத்த 2 நாட்கள் அவகாசம்.. ஆதார் எண் இணைப்புக்காக மின்சார வாரியம் சலுகை
மின் இணைப்புடன் ஆதார் எண்
தமிழகத்தில் மின் கட்டண உயர்வால் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க வேண்டும் என்றும், ஆதார் எண் இணைக்காத மின் இணைப்பிற்கான மின் கட்டணத்தை பெற்றுக்கொள்ள மறுப்பதுமான நடவடிக்கை மக்களை மிகுந்த நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.
மின்சார வாரியம்
மின்சார வாரியத்தின் இந்த நெருக்கடி காரணமாக மக்கள் உரிய நேரத்தில் மின்சாரக் கட்டணத்தை செலுத்த முடியாமல், மின் இணைப்பு துண்டிக்கும் நிலையும், பின்னர் அபராத கட்டணம் சேர்த்து கட்ட வேண்டிய நெருக்கடிக்கும் ஆளாகியுள்ளனர். ஏற்கனவே அநியாய மின் கட்டண உயர்வால் பரிதவிக்கும் மக்களுக்கு இந்த நடவடிக்கை மேலும் ஒரு நெருக்கடியை உருவாக்கியுள்ளது என்பதை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
பல குழப்பங்கள்
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதில் மக்களுக்கு பல்வேறு விதமான சந்தேகங்கள் உள்ள நிலையில் அதனை சரிசெய்யாமல் மக்களை நெருக்கடிக்கு ஆளாக்குவது என்பது ஏற்புடையதல்ல. ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் வைத்திருப்போர் அனைத்துக்கும் ஒரே ஆதார் எண்ணைப் பதிவு செய்ய வேண்டுமா? அவ்வாறு பதிவு செய்தால் ஏதேனும் சிக்கல் வருமா? வாடகைக்கு குடியிருப்பவர்கள் என்ன செய்வது? வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டுமா, அல்லது வீட்டு உரிமையாளர் பதிவு செய்ய வேண்டுமா? இந்த குழப்பங்களால் 100 யூனிட் இலவச மின்சாரம் திட்டத்தின் பயன் ரத்து செய்யப்படுமா? என்ற கலக்கத்தில் மக்கள் உள்ளனர்.
கண்டிக்கத்தக்கது
மேலும், வாடகை தாரரின் ஆதார் எண்ணைப் பதிவு செய்தால் வீட்டு உரிமையாளர்களுக்கு எதிர்காலத்தில் எந்தவிதமான சிக்கல் ஏற்படும்? வாடகை வீட்டில் வசிப்பவர்கள் வீடு மாறினால் என்ன செய்ய வேண்டும்? என்பன போன்ற குழப்பங்கள் மக்களிடத்தில் உள்ளன. மட்டுமின்றி பல்வேறு இடங்களில் தொழில்நுட்ப கோளாறு காரணமாகவும் ஆதார் எண் இணைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் ஆதார் இணைக்கப்படாத மின் இணைப்புக்கு மின் கட்டணத்தை வாங்க மறுப்பது, மின்சாரத்தை துண்டிப்பது, அபராத கட்டணம் விதிப்பது என்பது கண்டிக்கத்தக்கது.
கால அவகாசம்
அரசின் அறிவுறுத்தலின் படி மக்கள் ஆதார் எண்ணை எப்படியும் இணைக்கத்தான் போகிறார்கள். அதற்கு முன்னதாக மக்களுக்கு கால அவகாசத்தை வழங்குவதும், மக்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களையும் நிவர்த்தி செய்வதும் அரசின் பொறுப்பாகும். ஆகவே, உரிய கால அவசகாசம் இன்றி, ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே மின் கட்டணமே செலுத்த முடியும் என்கிற நெருக்கடியை தமிழக மின்சார வாரியம் கைவிட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.