தூத்துக்குடி துப்பாகிச் சூடு! ஆட்சிக்கு வந்தவுடன் தண்டிப்போம் எனக் கூறினீரே! நீதி கோரும் எஸ்.டி.பி.ஐ
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய 17 அதிகாரிகள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர துறை ரீதியான நடவடிக்கையை யாரும் கேட்கவில்லை என எஸ்.டி.பி.ஐ. கட்சி தெரிவித்துள்ளது.
ஆட்சிக்கு வந்தவுடன் தண்டிப்போம் எனக் கூறிவிட்டு முதல்வர் இப்போது சட்ட நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை எனக் கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
ஸ்டெர்லைட் ஆலை
தூத்துக்குடியில் உயிர்கொல்லி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் காவல்துறையின் அநியாயமான துப்பாக்கிச் சூட்டில் மாணவி ஸ்னோலின் உட்பட 14 பேர் படுகொலை செய்யப்பட்டனர். காவல்துறையின் அநியாய துப்பாக்கிச் சூடு நடவடிக்கைகள் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி அருணாஜெகதீசன் ஆணையம், மாவட்ட நிர்வாகம், காவல்துறை உயர் அதிகாரிகளை குற்றப்படுத்தி அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தது.
விசாரணை ஆணையம்
விசாரணை ஆணையத்தின் அறிக்கையும், பரிந்துரைகளும் கடந்த அக்டோபர் மாதம் 18ம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் அறவழியில் போராடிய மக்களின் மீது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூடு மிருகத்தனமானது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தங்களது பொறுப்புகளை தட்டிக்கழித்த தூத்துக்குடி மாவட்டத்தின் அப்போதைய ஆட்சியர் மட்டுமின்றி, மூன்று வருவாய் துறை அதிகாரிகள், அப்போதைய தென் மண்டல காவல்துறை தலைவர், திருநெல்வேலி சரக காவல் துறை துணைத் தலைவர், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஒரு காவல் துணைக் காண்காணிப்பாளர், மூன்று ஆய்வாளர்கள், ஒரு சார்-ஆய்வாளர் மற்றும் 7 காவலர்கள் உள்ளிட்ட 17 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விசாரணை ஆணையம் பரிந்துரை செய்திருந்தது.
கரும்புள்ளி
ஜனநாயகத்தின் மீது விழுந்த கரும்புள்ளியாக உள்ள தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டிற்கு விரைவாக நீதி கிடைக்கப்பெற வேண்டும், தவறிழைத்தவர்கள் மீது சட்டப்படி நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே நீதியை விரும்பும் அனைவரின் எதிர்ப்பார்ப்பாகும். விசாரணை ஆணையத்தின் அறிக்கை மீது உரையாற்றிய தமிழக முதல்வர் அவர்களும், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் தவறிழைத்தவகள் கூண்டில் ஏற்றப்படுவார்கள் என தெரிவித்தார்.
ஏற்புடையதல்ல
ஆனால், இது தொடர்பாக வெளியான அரசாணையில் உயர் அதிகாரிகள் மீது நீதித்துறை நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படாமல், துறை ரீதியான நடவடிக்கை மட்டுமே மேற்கொள்ள முடிவு செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கின்றது. குற்றத்தில் தொடர்புடைய கடைமட்டத்தில் உள்ள 7 காவலர்கள் மட்டும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மட்டுமே மேற்கொள்ளப்படுவது ஏற்புடையதல்ல.
ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து
தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடந்தபோது அன்றைய ஆட்சியாளர்கள் மீது கடுமையான விமர்சனங்களையும், குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தும் துப்பாக்கி சூட்டுக்கு காரணமானவர்களை ஆட்சிக்கு வந்தவுடன் தண்டிப்போம் என்று உறுதியளித்த நிலையில், ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து விசாரணை ஆணையத்தின் அறிக்கை கிடைத்த பின்னர், துறை ரீதியான நடவடிக்கைகளை மட்டும் மேற்கொள்வது என்பது நீதிக்காக காத்திருக்கும் மக்களை ஏமாற்றுவது போல் உள்ளது.
சட்ட நடவடிக்கை
ஆகவே, தமிழக அரசு தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் சுட்டிக்காட்டிய 17 அதிகாரிகள் மீது மட்டுமின்றி, தொடர்புடைய அனைத்து அதிகார வர்க்கத்தை சேர்ந்தவர்கள் மீதும் சட்ட நடவடிக்கையை தாமதமின்றி விரைவாக மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்கச் செய்திட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.