நடிகர் விஜய்க்கு சமூக பொறுப்புணர்ச்சி அதிகரித்துள்ளது! பணிகள் சிறக்கட்டும்! எஸ்.டி.பி.ஐ. வாழ்த்து!
சென்னை: நடிகர் விஜய்க்கு சமூக பொறுப்புணர்ச்சி அதிகரித்துள்ளதாகவும் அவரது பணிகள் இன்னும் சிறக்கட்டும் எனவும் எஸ்.டி.பி.ஐ. மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கல்வி ஊக்கமளிப்பு நிகழ்வுகளை நடிகர் விஜய் தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக நெல்லை முபாரக் தனது சமூக வலைதளப் பக்கங்களில் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

''நடிகர் விஜய் அவர்களின் கல்வி ஊக்கமளிப்பு முயற்சி பாராட்டுக்குரியது. ஒரு பிரபல்யம் என்ற அளவில் மற்றவர்களைவிட, ஒரு நடிகராக அவர் செய்யும் செயல்கள், தெரிவிக்கும் கருத்துக்கள் ஊடகங்கள் மூலம் தனி கவனம் பெறுகிறது.
திரைத்துறை பிரபலங்கள் பலரும் செய்து வரும் நற்பணிகளுக்கு மத்தியில்,நடிகர் சூர்யா போன்று விஜய் அவர்களும் கல்வி தொடர்பான சேவையில் அவர் தன்னை ஈடுபடுத்தியுள்ளார். அவரே சொன்னதுபோல அவருக்கு சமூக பொறுப்புணர்ச்சி அதிகரித்துள்ளது.
இனிவரும் காலங்களில் இதுபோன்ற கல்வி ஊக்கமளிப்பு நிகழ்வுகளை அவர் தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும். இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் அபுல்கலாம் ஆசாத் அவர்களின் நினைவாக போற்றப்படும் தேசிய கல்வி தின நாளில் இதுபோன்ற நிகழ்வுகளை அவர் முன்னெடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன்.
அவருக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதோடு, மென்மேலும் அவரின் பணிகள் சிறக்கவும் வாழ்த்துகிறேன்.'' இவ்வாறு நெல்லை முபாரக் தனது பதிவில் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications