சென்னையில் கடல் சீற்றம்.. தடுப்பு கற்களை தாண்டி.. சாலையில் புகுந்த நீர்.. வாகன ஓட்டிகள் அவதி
சென்னை: காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னையில் கடல் சீற்றம் அதிகரித்தது. தடுப்பு கற்களை தாண்டி கடல்நீர் வெளியேறியதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
தமிழகத்தின் வடகடலோர பகுதியில் இருந்து 270 கிலோ மீட்டர் தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணிநேரத்தில் தமிழக கடற்கரையை நோக்கி நகர உள்ளது.
இதனால் பொதுமக்களுக்கும், மீனவர்களுக்கும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் சில மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடல் சீற்றம்
இதன் காரணமாக சென்னையில் கடல் வழக்கத்தை விட சீற்றமாக காணப்பட்டது. உயரமாக எழுந்த அலைகள் தடுப்பு பாறைகள் மீது மோதி சாலையில் கடல் நீராக நுழைந்தது. சென்னை திருவொற்றியூர் கடற்கரை பகுதியில் காற்றழுத்த தாழ்வு காரணமாக கடல் சீற்றமாக காணப்பட்டது. காற்றும் அதிகமாக வீசுகிறது. இதனால் காலை முதல் எண்ணூர், ராமகிருஷ்ணா நகர்,பெரியகுப்பம், தாளம் குப்பம், ஆகிய பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

சாலையில் கடல்நீர்
மேலும் ஆக்ரோஷ அலையால் எண்ணூர் விரைவு சாலை பகுதியில் எர்ணாவூர் குப்பம், தாளம் குப்பம் ராமகிருஷ்ணா நகர் ஆகிய பகுதிகளில் கடற்கரையோரம் கொட்டப்பட்டுள்ள பாறைக் கற்களை தாண்டி சாலையில் கடல் நீர் புகுந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சாலையில் செல்வதில் சிரமத்தை சந்தித்தனர்.

மழை பெய்யும் மாவட்டங்கள்
மேலும் தமிழகத்தை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகம், புதுச்சேரில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை மாவட்டங்கள், புதுச்சேரி காரைக்காலில் இன்று கனமழையும், நாளை மிக கனமழையும் பெய்ய உள்ளது. நாளை அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்ய உள்ளது.
Recommended Video

மீனவர்களுக்கு எச்சரிக்கை
வங்கக் கடல் மன்னார் வளைகுடா அதையொட்டிய வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடல் பகுதிகளில் மணிக்கு 75 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் நாளை வரை மீனவர்கள் அந்த பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications