அதிமுகவில் இருந்து முன்னாள் MLA விலகல்.. நாங்குநேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அப்செட்!
சென்னை: நாங்குநேரி முன்னாள் எம்.எல்.ஏ ரெட்டியார்பட்டி நாராயணன் அதிமுகவில் இருந்து விலகியுள்ளார். வரும் சட்டசபை தேர்தலில் நாங்குநேரி தொகுதியை அமமுகவுக்கு ஒதுக்கியதை எதிர்த்து முன்னாள் எம்.எல்.ஏ நாராயணன் அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்த சூழலில் அனைத்து கட்சிகளும் பரபரப்பாக வேலை பார்த்து வருகின்றன. வரும் சட்டசபை தேர்தலில் என்.டி.ஏ கூட்டணியில் அமமுக 11 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சிக்கு மொத்தம் 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதன்படி, நாங்குநேரி, ஒட்டப்பிடாரம், திருச்சி மேற்கு, சைதாப்பேட்டை, பூந்தமல்லி, மடத்துக்குளம், பெரியகுளம், மன்னார்குடி, திருவையாறு, காரைக்குடி மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட 11 தொகுதிகளில் அமமுக போட்டியிடுகிறது.
இந்நிலையில், நாங்குநேரி முன்னாள் எம்.எல்.ஏவான நாராயணன் அதிமுகவில் இருந்து விலகியுள்ளார். முன்னாள் எம்.எல்.ஏ நாராயணன், நாங்குநேரியில் தனக்கு சீட் கிடைக்கும் என எதிர்பார்த்து வந்த சூழலில் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால் கடுமையாக அப்செட் ஆனார். இதையடுத்து அவர் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
ரெட்டியார்பட்டி நாராயணன் 1986-ல் அதிமுகவில் இணைந்து தொடர்ந்து அந்தக் கட்சியிலேயே இருந்து வந்தவர். ஜெயலலிதா முதல்வரான 1991-ல் இருந்து 1996 வரை கிளைச் செயலாளர், 1996-ல் ரெட்டியார்பட்டி பஞ்சாயத்து தலைவர், 2004-ல் நாடாளுமன்ற தேர்தலில் பாளையங்கோட்டை தேர்தல் பணிக்குழு உறுப்பினர், 2009 நாடாளுமன்ற தேர்தலில் நாங்குநேரி சட்டமன்ற தேர்தல் பணிக்குழு உறுப்பினர், அதன்பிறகு 2009-ல் நெல்லை புறநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி இணைச்செயலாளர் மற்றும் 2011-ல் புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து 2013-ல் இருந்து எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளராக பணியாற்றி வந்தார். நாராயணனுன் மனைவி பவளச்செல்வி காவல்துறை உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். மூன்று குழந்தைகள் உள்ளனர். ஆரம்பத்தில் ரெட்டியார்பட்டி நாராயணன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தவர். கடந்த 2019ல் நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்றவர் நாராயணன்.












Click it and Unblock the Notifications