Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

யார் யாருக்கோ சீட்? தொண்டர்களைப் புறக்கணிக்கும் திருமா? - விசிகவில் வெடிக்கும் குழப்பம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் தொடங்கிய திருமாவளவனின் தவறான முடிவுகள் இப்போது வரை முடிவடைந்ததாகத் தெரியவில்லை. அவர் எடுக்கும் முடிவுகள் கட்சியைப் பலவீனமாக்கி வருகிறதா? பலம் பெற வைக்கிறதா?

மூப்பனார் மூலம் தேர்தல் களத்திற்கு அழைத்து வரப்பட்டவர் தொல்.திருமாவளவன். 1999இல் விசிக தேர்தல் பாதைக்குத் திரும்பியது. முன்னதாக 'தேர்தல் பாதை திருடர் பாதை' என்று 'ஆஹா அந்தப் பழம் புளிக்கும்' என்கிற மனப்பான்மையில்தான் திருமாவளவன் மனநிலை இருந்தது. வடமாவட்டம் தொடங்கி தென் மாவட்டம் வரை ஒரு காலத்தில் விசிக மீது 'வன்முறைக் கட்சி' முத்திரை என்ற முத்திரை குத்தப்பட்டிருந்தது. அதைத் துடைத்தெறிய மூப்பனாரின் கூட்டணி திருமாவுக்கு உதவியது.

Seats for Outsiders Is Thirumavalavan Sidelining Cadres A Rift Within the VCK

கட்சியை ஆரம்பித்து 25 ஆண்டுகள் கழித்தே மாநிலக் கட்சி என்ற தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை விசிக பெற்றது. அதிகாரப்பூர்வமாக 10 ஜனவரி 2025 அன்று தேர்தல் ஆணையம் அளித்திருந்த கடிதத்தை வெளியிட்டு மகிழ்ச்சியைப் பகிர்ந்திருந்தார் திருமா. முறைப்படி 'பானை' சின்னம் கட்சியின் அடையாளமானது.

விசிக 1999இல் இருந்து வெவ்வேறு சின்னங்களில் களம் கண்டுள்ளது. மங்களூர் தொகுதியில் 2001இல் திமுக உதயசூரியன் சின்னத்தில் வெற்றிபெற்று முதன்முதலாகச் சட்டமன்றத்திற்குள் நுழைந்த திருமா, தன் பதவிக் காலம் முழுமை பெறுவதற்கு முன்பே, மு.கருணாநிதியின் உடனான கருத்து மோதலால் பதவியை ராஜினாமா செய்தார்.

சின்னங்கள் பலவிதம்

கிட்டத்தட்ட 2011இல் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த விஜயகாந்த் ஜெயலலிதாவுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்த மாதிரியே திருமாவும் நடந்துகொண்டார். மக்களவைத் தேர்தலை ஒட்டி கருணாநிதி திமுக கூட்டணியில் சேர்க்கத் தயங்கினார். 'தலித் கட்சிகள் அனைத்து சாதி கட்சிகள்' என்றார். திருமாவை பி.ஆர் கட்சி என்றார். டாக்டர் கிருஷ்ணசாமியை பிஎல் கட்சி என்றார். இந்தச் சீண்டலால் சினமுற்ற திருமா, திமுக சின்னத்தில் நின்று பெற்ற பதவியை ராஜினாமா செய்தார்.

தர்க்கரீதியாகச் சரியான முடிவு. அரசியல் ரீதியாக அது பின்னடைவு.
தேர்தல் களத்தில் கொள்கை முடிவுகளுக்கு இடமில்லை. அதேபோல் உணர்ச்சிவசப்பட்ட முடிவுகள் இழப்பை உண்டாக்கும். அதற்குச் சரியான உதாரணம் வைகோ. அவரைப் போல் அரசியலில் சில சமயம் துரித முடிவுகளை எடுத்துவிடுகிறார் திருமா.

விசிக இந்த 25 ஆண்டுகளில் மெழுகுவர்த்தி, மோதிரம் என சுயேச்சை சின்னங்களில் போட்டியிட்டு தோல்வியைக் கண்டுள்ளது. 2004 மக்களவையில் 'அம்பு' சின்னத்தில் நின்றது. ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணி. 'மக்கள் கூட்டணி' என மூன்றாவது அணி அமைத்தார் திருமா.

பாஜக பாசிச கட்சி என்று விமர்சித்த அவர், என்.டி.ஏ கூட்டணி அமைப்பாளர் பெர்னாண்டஸுடன் கைகோர்த்தார். அது விமர்சிக்கப்பட்டது. அந்தத் தேர்தலில் அதிமுக, திருக ஆகிய இரண்டு கட்சிகளும் திருமாவை புறக்கணித்தன. ராமதாஸின் பாமகவைக் கூட்டணிக்குள் வைத்துக் கொண்ட மு.கருணாநிதி, விசிக சாதியக் கட்சி என்று பேசிய விநோதம் அரங்கேறியது.
இத்தேர்தலில், 'கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம்; எளிய மனிதனுக்கும் அதிகாரம்' என்று முழங்கினார் திருமாவளவன். அந்த எளிய அதிகாரம் இன்று அவரது கட்சி தொண்டர்களுக்கே கிடைக்கிறதா? என்பது கேள்விக் குறியாகியுள்ளது.

ஆதவ் அர்ஜுனாவைக் கட்சிக்குள் அவசர கதியில் கட்சிக்குள் இணைத்த அவர் உடனடியாக கட்சியில் பொறுப்பை வழங்கினார். அடுத்து 2024 மக்களவைத் தேர்தலில் அவருக்காகப் பொதுத் தொகுதி கேட்டு திமுகவுக்கு அழுத்தம் தந்ததாகச் செய்திகள் வந்தன.

அந்த வேகத்தை 2026 சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர் தேர்வில் அவர் ஏனோ காட்டவில்லை. சுணக்கம் நிலவியது. கட்சிக்குள் நன்றாகச் செயல்படும் ஆளூர் ஷாநவாஸுக்கு சீட்டு மறுக்கப்பட்டது பெரிய விஷயமில்லை. கட்சிக்கு காட்டுமன்னார்கோவில் தொகுதியில் தானே களம் காணப்போவதாகச் சொன்னவர், கடைசியில் இளையபெருமாள் மகன் ஜோதிமணிக்கு அத்தொகுதியை விட்டுத் தந்துள்ளார். அவர் விசிக அரசியல் நிலைப்பாட்டை ஏற்காதவர். காங்கிரஸ்காரர். அவரைத் தேடி நிறுத்துகிறார் திருமா.

ஆனால், 25 ஆண்டுகாலம் கழித்து கட்சிக்குத் தேர்தல் அங்கீகாரத்தைத் தேர்தல் ஆணையம் தருகையில், 'இந்த வெற்றியை 1999ல் நடந்த வன்முறை தாக்குதலில் ரத்தம் சிந்தியவர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்" என்றார். ரத்த சிந்திய அந்தக் கட்சிக்காரனின் வாரிசுகளைத் தேடிப்பிடித்து அல்லவா அவர் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் நிறுத்தி இருக்க வேண்டும்?

குழப்பத்தில் சிக்கிய திருமா

விசிக தொண்டன் ரத்தம் சிந்தி, உயிரைக் கொடுத்து வளர்த்த கட்சியின் பிரதிநிதித்துவத்தைக் காங்கிரஸ் ரத்தம் ஓடும் இளையபெருமாள் மகளுக்கு ஏன் வழங்கவேண்டும் என ஒரு தொண்டன் கேட்பதில் தவறு காண முடியுமா?
இவருக்காக ரத்தம் சிந்திய சிதம்பரம் தொகுதி, மரக்காணம் பகுதி தியாகி குடும்பத்தில் ஒருவர்கூட இல்லாமல் போனார்கள்? 2016இல் ஆர்.கே.நகரில் கல்வியாளர் வசந்தி தேவியை ஜெயலலிதாவுக்கு எதிராக நிறுத்தினார். அதற்கு ஒரே காரணம் விசிக ரவிக்குமாருக்கு அவர் நெருங்கியவர். அதற்காகச் சீட்டா?

எத்தனை குழப்பங்கள்? ஷா நவாஸுக்கு சீட்டுக் கொடுப்பதும் மறுப்பதும் அக்கட்சியின் தலைவரின் முடிவு. அதற்கான முழு உரிமை திருமாவளவனுக்கு உண்டு. ஆனால், அந்தச் சர்ச்சையை வளரவிட வேண்டும்? ஷாநவாஸ் தன்னை வந்து சந்தித்தார் என்கிறார். அழைத்தால் வந்து பார்க்கும் ஒரு தொண்டனாகத்தானே ஷா நவாஸ் இருந்திருக்க வேண்டும். அங்கே கேள்வி எழாதா?

இறுதியாகப் புதுச்சேரியிலும் குழப்பம். அங்கு வேட்பாளர்களை நிறுத்திவிட்டு, பின் காங்கிரஸ் தொண்டர்களின் வெற்றிக்காக அவர்கள் பாடுபடுவார்கள் என்கிறார். எந்தத் தியாகமும் விசிகவுக்காக செய்யாத வசந்தி தேவிக்கு தரும் முக்கியத்துவம் கடைக்கோடி விசிக தொண்டனுக்குத் தரக்கூடாதா? ஆதவ் அர்ஜுனா விவகாரத்தில் கூட, கட்சியில் தலைவர் திருமாவே பேசினார். ஆதவ் வீட்டுக்குள் மவுனமாக வாய்மூடி உட்கார்ந்திருந்தார். தலைவரை விட, கட்சியைவிட இவர்கள் பெரியவர்களா?

1999 தொடங்கி மக்கள் நலக் கூட்டணி வரை திருமா எடுத்த பல முடிவுகள் தவறானவை. ஆளுர் ஷாநவாஸ் விவகாரத்தில் கூட நான் தவறான முடிவைக் கூட எடுத்திருக்கலாம் எனக் காணொளியில் விளக்கம் அளித்துள்ளார். விளக்கத்தால் கட்சி வளராது; வியூகத்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும் என்பதை அறிந்த தலைவரின் இந்தக் குழப்பங்கள் அரசியல் எதிரிகளை வலிமை பெறவே செய்யும்.

- கடற்கரய்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+