பின்னாடி வரும் பிரச்சினை..அதிமுக-பாமக ரகசிய டீல்! விக்கிரவாண்டியில் களமிறங்காமல் போக இதுதான் காரணம்!
சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாது என அறிவித்திருக்கிறார் அந்த கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி. இந்த நிலையில் பாமக- பாஜக -அதிமுக கூட்டணி மீண்டும் உருவாவதற்கு அஸ்திவாரம் தான் தற்போதைய முடிவு என்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.
கடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏவான புகழேந்தி மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் தற்போது விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மக்களவைத் தேர்தல் முடிந்த கையோடு தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி உள்ளன. தற்போதைய சூழலில் திமுக, பாட்டாளி மக்கள் கட்சி, நாம் தமிழர் ஆகிய அரசியல் கட்சி வேட்பாளர்களும் சுயேட்சைகள் உள்ளிட்டவர்களும் களத்தில் இருக்கின்றனர்.
தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக இந்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்திருக்கிறது. இதன் காரணமாக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மும்முனைப் போட்டியானது உருவாகி இருக்கிறது. தாங்கள் போட்டியிடாத நிலையில் தேமுதிகவையும் போட்டியிட வேண்டாம் என அதிமுக கேட்டுக் கொண்டதாகவும் இதையடுத்தே தேர்தலை புறக்கணிப்பதாக பிரேமலதா விஜயகாந்த் அறிவித்ததாக கூறுகின்றனர்.
இந்த நிலையில் தான் அதிமுக தேர்தலை புறக்கணித்ததற்கு பின்னணியில் பாமக இருப்பதும் ஒரு ரகசிய உடன்படிக்கையின் பேரிலேயே தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு இருக்கிறது என்கின்றனர் விழுப்புரம் மாவட்ட பாமக அதிமுக நிர்வாகிகள். இது தொடர்பாக அவர்களிடம் பேசிய போது பல தகவல்கள் கிடைத்தன. ஜனநாயகம் , பணநாயகம், ஆளுங்கட்சி அராஜகம், பண விநியோகம், திருமங்கலம் ஃபார்முலா என பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் அது வெறும் வெளிப்படை பேச்சு தான் எனவும், அதிமுக பாஜக பாமக இடையேயான ரகசிய உடன்படிக்கை தான் இந்த தேர்தல் புறக்கணிப்பு என்கின்றனர்.
முதலில் விக்கிரவாண்டி தேர்தலில் பாஜக போட்டியிடவே விரும்பியது. தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை அந்த தொகுதியில் பாஜக முன்னாள் எம்எல்ஏவும் மாநில துணைத்தலைவருமான ஏஜி சம்பத்தை களமிறக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால் பாட்டாளி மக்கள் கட்சி தாங்கள் போட்டியிட வேண்டும் என விரும்பியதாக கூறப்படுகிறது. அதாவது ஏற்கனவே தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி ஆகியவை மாநில கட்சி அந்தஸ்தை பெற்றிருக்கின்றன.
ஆனால் பாமகவோ அந்த இடத்தை பெற முடியாமல் தவித்து வருகிறது. வாக்கு சதவீதம் மற்றும் இன்னும் ஒரு எம்எல்ஏ கிடைத்தால் மாநில கட்சி அந்தஸ்தை பெற ஏதுவாக இருக்கும் என பாஜக தரப்பிடம் பாமக கோரிக்கை விடுத்ததன் அடிப்படையிலேயே அந்த கட்சி போட்டியிட பாஜக விட்டுக் கொடுத்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தைலாபுரத்தில் நடந்த பாமக நிர்வாகிகளின் கூட்டத்தில் மீண்டும் சௌமியா அன்புமணியையே விக்கிரவாண்டி தொகுதியில் களம் இறக்கலாம் என ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் மக்களவைத் தேர்தலில் கடைசி நேரத்தில் ஏற்பட்ட தோல்வியால் அதிருப்தியில் இருக்கும் சௌமியா அன்புமணி விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட விரும்பவில்லை. இதை அடுத்து முன்னாள் மாவட்ட செயலாளரான புகழேந்தி உள்ளிட்ட பலரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில் தற்போது சி.அன்புமணி வேட்பாளராக களம் இறங்கி உள்ளார். இந்த நிலையில் அதிமுக போட்டியிடாததற்கு லோக்கல் பாலிடிக்ஸும் காரணம் என்கின்றனர். கடந்த தேர்தலின் போது அதிமுக கூட்டணிக்குள் பாட்டாளி மக்கள் கட்சியை அழைத்து வர பெரும் பங்கு வைத்தவர் முன்னாள் அமைச்சரான சிவி சண்முகம்.
அப்போது மாவட்ட செயலாளராக இருந்த புகழேந்தி சிவி சண்முகத்தையும் ராமதாஸையும் பேச வைத்ததற்கு முயற்சி எடுத்தார். இவர் சிவி சண்முகத்தின் சொந்தக்காரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் தோல்வியை சந்தித்திருக்கும் எடப்பாடி பழனிச்சாமி இந்த தேர்தலிலும் போட்டியிட்டால் பாட்டாளி மக்கள் கட்சியையும் களத்தில் எதிர்க்க வேண்டி இருக்கும் இதனால் பின் நாட்களில் கூட்டணி பாதிக்கப்படலாம் எனவும் இதன் காரணமாகவே அதிமுக போட்டியிடவில்லை என்கின்றனர்.
அதிமுக போட்டியிடவில்லை என்பதை உறுதி செய்து கொண்டதற்குப் பிறகு சி.அன்புமணி தற்போது விக்கிரவாண்டி தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். அந்தப் பகுதியில் ஓரளவு செல்வாக்கு பெற்றவர் தான் இவர். கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட போதே சுமார் 41 ஆயிரம் வாக்குகளை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2026 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என எடப்பாடி பழனிச்சாமி பேசி இருக்கும் நிலையில், பாமகவை தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வரவே எடப்பாடி பழனிச்சாமி விரும்புகிறார்.
இதன் காரணமாக தற்போது இடைத்தேர்தலில் போட்டியிலிருந்து விலகி விட்டதால் வரும் தேர்தலில் அந்த கட்சி தங்களுக்கு ஆதரவு அளிக்கலாம் எனவும் எடப்பாடி பழனிச்சாமி கணக்கு போட்டு இருக்கிறார். அது மட்டுமல்லாமல் பாஜகவும் கூட்டணிக்குள் மீண்டும் வரலாம் என்றும் கூறுகின்றனர் அரசியல் பிரமுகர்கள்.












Click it and Unblock the Notifications