சிஎம் ஸ்டாலின்.. அப்பாவிகளை ரிலீஸ் பண்ணுங்க.. தேசதுரோக வழக்கை வாபஸ் பெற வேண்டும்: எம்பி ரவிக்குமார்
முதல்வருக்கு விசிக எம்பி ரவிக்குமார் கடிதம் எழுதியிருக்கிறார்
சென்னை: சுப்ரீம்கோர்ட் உத்தரவின் அடிப்படையில், அதிமுக ஆட்சியில் பதியப்பட்ட தேசத்துரோக வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் என்று ரவிக்குமார் எம்பி, முதல்வர் முக ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எம்பியும், விசிகவின் பொதுச் செயலாளருமான ரவிக்குமார், தன் தொகுதியின் நலனை தாண்டி, ஒட்டுமொத்த தமிழர் நலன் குறித்தும் அக்கறை எடுத்து கொள்பவர்.. அதிலும் பாதிக்கப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்களின் பக்கம் நின்று அவர்களுக்காக தன் குரலை உயர்த்தி எழுப்புவர்.
தேர்தலுக்கு ஒருநாள் முன்பு, அதாவது ஏப்ரல் 6-ம் தேதி இவர் ஒரு கணிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.. அது தேர்தலுக்கு முந்தைய கணிப்பு இல்லை.. தேர்தலுக்கு பிந்தைய கணிப்பும் இல்லை.. தேர்தலுக்குப் பிறகு அரசியலில் என்னென்ன காட்சிகள் அரங்கேறும் என்ற கணிப்புதான் அது!

கணிப்பு
அதில், "கமல் மறுபடியும் சினிமாவில் கவனம் செலுத்தக் கிளம்பிவிடுவார்... மநீமவில் தற்காலிக தஞ்சம் புகுந்த சிலர் பாஜகவுக்கு செல்வார்கள். இபிஎஸ் - ஓபிஎஸ் பிரியக்கூடும்.. எடப்பாடியின் பிடியிலிருந்து அதிமுக விடுபட்டு மேலும் வகுப்புவாத அரசியலை நோக்கி நகரும், தமிழகக் கருத்தியல் களம் சமூகநீதியா? சனாதனமா? எனத் தெளிவாக அணிபிரியும். தேர்தலுக்குப் பிறகுதான் நமக்கு வேலை அதிகமாக இருக்கிறது.

கருத்தியல்
தோழர்களே சனாதனத்துக்கு எதிரான கருத்தியல் படைக்கலன்களைத் தயார்படுத்துங்கள். கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பின்னப்பட்ட வகுப்புவாத வலைப்பின்னலை அடையாளங்கண்டு அறுத்தெறிவதே நமது முதன்மையான பணியாக இருக்கட்டும் என்று பதிவிட்டார்.

பதிவு
ரவிக்குமாரின் இந்த பதிவு பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.. இன்னும் ஆட்சி மாற்றம் ஆரம்பித்து முழுசா ஒரு மாசம்கூட முடிவடையாத நிலையில், ரவிக்குமார் சொன்ன காட்சிகள் பெருமளவில் அரங்கேறிவிட்டன.. அதுமட்டுமல்ல, முதல்வராக ஸ்டாலின் பதவியேற்காத நிலையிலேயே "முதல்வர் ஸ்டாலின், லாக்டவுன் போடுங்கள், மக்களுக்கு ரூ.4000 கொடுங்கள்" என்று கூட்டணியில் இருந்து கொண்டு வேண்டுகோள் விடுத்ததையும் இங்கு நினைவுகூற வேண்டி உள்ளது.

முதல்வர்
இப்படிப்பட்ட சூழலில், முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார் எம்பி ரவிக்குமார்.. அந்த கடிதத்தில், "கடந்த 10 வருஷமாக தமிழ்நாட்டில் நடந்து வந்த அதிமுக ஆட்சியின்போது, பொதுமக்களின் கருத்துரிமை பெருமளவில் பறிக்கப்பட்டது.. அரசுக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்தவர்கள்.. தமது அடிப்படை உரிமைகளுக்காகப் போராடியவர்கள் என ஏராளமானோர் பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டார்கள்..

தேசதுரோகம்
2020 வரை 139 வழக்குகள் இப்பிரிவின் கீழ் பதிவுசெய்யப்பட்டு பல்லாயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இவ்வளவு பேர் இப்படி தேசத்துரோக வழக்குகளை எதிர்கொள்ளவில்லை.

அறிவுரை
இன்று மூத்த ஊடகவியலாளர் வினோத் துவா மீது இமாச்சலப் பிரதேசத்தில் பதியப்பட்ட தேசத்துரோக வழக்கை விசாரித்த சுப்ரீம்கோர்ட், அந்த வழக்கை ரத்து செய்ததோடு, கேதார்நாத் சிங் vs பீகார் மாநில அரசு (1962) என்ற வழக்கில் அளிக்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தான் தேசத்துரோக வழக்குகளைப் பதிவு செய்ய வேண்டுமென்று தெளிவாக அறிவுறுத்தியுள்ளது.

அதிமுக
அதனால், கடந்த 10 வருஷத்தில் பொதுமக்களுக்கு எதிராக அதிமுக அரசால் பதியப்பட்ட தேசத்துரோக வழக்குகள் அனைத்தும் சுப்ரீம் கோர்ட்டின் அந்த தீர்ப்புக்கு முரணானவை... மனித உரிமைகள் மீது மதிப்பு கொண்ட தங்களது தலைமையிலான அரசு கடந்த 124 ஏ பிரிவின் கீழ் பதியப்பட்ட வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெற வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

எதிர்பார்ப்பு
ஏற்கனவே, பதவி ஏற்றது முதல் எண்ணற்ற அறிவிப்புகளையும், மக்கள் நல திட்டங்களையும் அறிவித்து வரும் முக ஸ்டாலின், ரவிக்குமார் வலியுறுத்தியுள்ள இநத் கோரிக்கை குறித்தும், நிச்சயம் பரிசீலிப்பார் என்றும், அதன்மூலம் பல அப்பாவி பொதுமக்கள் விடுதலையாக வாய்ப்புள்ளதாகவும் பெரிதும் நம்பப்படுகிறது..!












Click it and Unblock the Notifications