தலித் முதல்வராக முடியாது..பற்ற வைத்த திருமா! ஆதரவாய் வந்த கார்த்தி..“அண்ணன்” சீமானும் வந்துட்டாரே!
சென்னை: சென்னையில் நேற்று விசிக சார்பில் பங்கேற்றுப் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்பியுமான தொல்.திருமாவளவன், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வரலாம் போகலாம். ஆனால் ஒரு நாளும் ஒரு தலித் முதல்வராக முடியாது என பேசியிருந்தார். இந்நிலையில் திருமாவளவனின் கருத்து உண்மை தான் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பட்டியலின சமூகத்தின் இட ஒதுக்கீட்டு உரிமையை நசுக்கும் வகையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு இருப்பதாகவும், பட்டியலின சமூகத்தின் இடஒதுக்கீட்டு அளவை அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி விசிக சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர்,"தமிழ்நாட்டில் எத்தனையோ கட்சிகள் வரலாம், போகலாம். ஆனால் ஒரு காலத்திலும் தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவர் தமிழகத்தின் முதல்வராக ஆக முடியாது. நிறைய பேர் ஜனநாயகம் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பாடம் எடுக்கிறார்கள். விசிகவிற்கு ஜனநாயகம் குறித்து யாரும் பாடம் எடுக்க தேவையில்லை. சாதி ஒழிப்பு என்பது தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நோக்கம். ஆனால் திமுக மீது நம்பிக்கை இருக்கிறது" என்றார்.
இந்நிலையில் திருமாவளவனின் கருத்து உண்மை தான் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் ஆதரவு தெரிவித்துள்ளனர். புதுகோட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் எம்பி கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் திருமாவின் கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த கார்த்தி சிதம்பரம்,"தமிழகத்தில் ஒரு தலித் முதல்வராக வர முடியாது என விடுதலைகள் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்திருப்பது உண்மைதான். அதிகம் அமைச்சராகவே இல்லையே.. தமிழ்நாடு மட்டுமல்ல பல மாநிலங்களில் இதே நிலைதான் நிலவுகிறது. பல மாநில மக்கள் ஒரு தலித் தலைவர் முதலமைச்சராக இருப்பதை விரும்பவில்லை. இது மறுக்க முடியாத உண்மை. தமிழகத்திலும் அப்படித்தான் உள்ளது. அதே நேரத்தில் வரும் காலங்களில் இதில் மாற்றம் வர வேண்டும். நிச்சயம் ஒரு தலித் தமிழக முதலமைச்சராகும் போது வரவேற்பேன்" என்றார்.
இதுகுறித்து சீமான் பேசும் போது," தமிழ்நாடு முதலமைச்சராக ஒரு தலித் வர முடியாது என்ற திருமாவளவனின் கருத்தை நான் ஏற்கிறேன். ஆனால் திமுகவின் மீது நம்பிக்கை இருக்கிறது என அவர் கூறுவதை நான் ஏற்க முடியாது. அதனை நான் எதிர்க்கிறேன். ஏன் துணை முதலமைச்சர் ஆக ஒரு ஆதித் தமிழ் குடியைச் சேர்ந்தவரை நியமிக்க முடியாதா? கல்வி அமைச்சராக ஒரு பறையரை நியமனம் செய்தால் மாணவர்கள் படிக்க மாட்டார்களா?
ஆதிதிராவிடர் நலத் துறையை தவிர எந்த துறைக்கு தலித் அமைச்சராக்கப்பட்டு இருக்கிறார். திமுகவின் வீட்டுக்குள் இருந்து துணை முதலமைச்சர் வந்தால் தான் உண்டு.. நாட்டுக்குள் இருந்து யாரும் வர முடியாது. அப்படி வந்தால் நாடு நாசமாக போய்விடும் என நினைக்கிறார்கள் போல.. கூட்டணியில் இருக்க வேண்டியதால் திருமாவளவன் அப்படி பேசி இருக்கிறார். அதனால் திருமாவளவன் சொன்னதையும் நாங்கள் பொறுத்துப் போக வேண்டி உள்ளது..
நாம் தமிழர் கட்சிக்கு ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள் அப்போது நாங்கள் என்ன செய்கிறோம் என்று பாருங்கள். ஆதித்தமிழர் குடிகளை மதிப்பதற்கு பதில் மிதிக்கும் நிலை இருக்கிறது. அதை சட்டம் போட்டு திருத்த முடியாது. உளவியலாக மாற்ற வேண்டும்" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications