சீமானுக்கு பெரிய மனசு! நாதகவினருக்கு 18 வகையான அசைவ விருந்து! வஞ்சிரம் மீன் முதல் மட்டன் சுக்கா வரை!
சென்னை: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படும் நிலையில் அவரது வீட்டில் கட்சி நிர்வாகிகளுக்காக 18 வகையான அசைவ உணவுகள் தயாரித்து வழங்கினார். அவரும் சேர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் இயக்குநருமான சீமான், கடந்த 2010ஆம் ஆண்டு முதல் அரசியல் கட்சியை தொடங்கி 15 ஆண்டுகளாக தேர்தலில் தனித்தே போட்டியிடுகிறார்.
கட்சி வேறுபாடு இல்லாமல் நியாயம் என்றால் பாராட்டுவார். தவறு என்றால் தட்டிக் கேட்கவும் தயங்கியதில்லை. இவர் தனது கட்சி நிர்வாகிகளை "தம்பிகள்" என்றுதான் அழைப்பார். அவர்களும் சீமானை, சார் என அழைப்பதை விட அண்ணன் என்றே அழைத்து வருகிறார்கள்.
இவர் 1966 ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி அரணையூரில் பிறந்தார். இவரது மனைவி கயல்விழி. இவர் அதிமுக ஆட்சியின் போது சபாநாயகராக இருந்த காளிமுத்துவின் மகள் ஆவார். இவர்களுக்கு ஒய்எம்சிஏ மைதானத்தில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். சீமான் அரசியல்வாதி மட்டுமல்ல, அவர் பட இயக்குநர், நடிகர் என்ற அடையாளங்களையும் கொண்டிருக்கிறார்.
இவர் ஈழத் தமிழர்களுக்காக போராடியவர். இவரது கட்சியில் ஆண், பெண் இரு பாலருக்கும் சமமாக சீட்டுகள் வழங்கப்படுகின்றன. சீமானின் பிரஸ் மீட் என்றாலே ஆர்வமாக இருக்கும். அத்தனை பாயிண்ட் பை பாயிண்ட்டாக பேசுவார்.
இந்த நிலையில் சீமானுக்கு இன்று 59ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளையொட்டி காலை முதல் அரசியல் கட்சியினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அது போல் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
தனது பிறந்தநாளையொட்டி கட்சி நிர்வாகிகளுக்கு ஒரு விருந்தை சீமான் ஏற்பாடு செய்துள்ளார். தனது நீலாங்கரை வீட்டில் சமையல் கலைஞர்களை அழைத்து தடபுடலாக சமையல் செய்யப்பட்டுள்ளது.
சிக்கன் 65, சிக்கன் குழம்பு, மட்டன் குழம்பு, பிரியாணி, மட்டன் சுக்கா, நல்லி எலும்பு, வஞ்சிரம் மீன் வறுவல், மீன் குழம்பு, முட்டை வறுவல் என 18 வகையான உணவுகள் தயார் செய்யப்பட்டுள்ளன. சீமானுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வந்த நிர்வாகிகள் வயிறார சாப்பிட்டுவிட்டு மனதார வாழ்த்தி வருகிறார்கள்.
சீமானுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், அன்புச் சகோதரர் சீமானுக்கு இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள். நீண்ட ஆயுள் மற்றும் உடல் நலத்துடன், தொடர்ந்து பொது சேவையாற்றிட இறைவனை வேண்டுகிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டிருந்தார்.












Click it and Unblock the Notifications