“என் பின்னால் இருப்பது ரசிகர் கூட்டம் கிடையாது.. கருத்தியல் கூட்டம்!” விஜய் மீது சீமான் அட்டாக்!
சென்னை: "என் பின்னால் வருவது ரசிகர்கள் கூட்டம் கிடையாது, அது கருத்தியல் மணிகள்" என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருப்பது விவாதங்களை கிளப்பியிருக்கிறது. விஜய் பின்னால் திரளும் கூட்டம் ரசிகர் பட்டாளம் என்று விமர்சனங்கள் எழுந்திருக்கும் நிலையில், சீமான் மறைமுகமாக விஜய்யை தாக்கியிருக்கிறார் என்று பலரும் கூறுகின்றனர்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27ம் தேதி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். அவர் மக்கள் மத்தியில் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி சுமார் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. சம்பவம் குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருந்தனர். குறிப்பாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்த கருத்துக்கள் மிகவும் கவனம் பெற்றிருந்தது.

என்ன மாதிரியான கட்சி இது? தலைவர்களுக்கு தலைமைப் பண்பே இல்லை. கரூர் சம்பவத்திற்கு பின்னர் கட்சியினர் அந்த இடத்தைவிட்டு சென்றுவிட்டனர். சம்பவம் தொடர்பாக கட்சி சார்பில் எந்த வருத்தமும் தெரிவிக்கப்படவில்லை. இந்த செயலை நீதிமன்றம் கண்டிக்கிறது என உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் தெரிவித்திருந்தார். இதனையடுத்து தவெகவினர் மீதான விமர்சனங்கள் அதிகரித்தன. எல்லா கட்சிகளிலும் தொண்டர்களை ஒருங்கிணைக்க குழு இருக்கும். ஆனால் தவெகவில் அப்படி எதுவும் இருப்பதை போலவே தெரியவில்லை என்று பேசப்பட்டது.
மற்ற கட்சிகளில், தலைவர் ஒரு மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறார் எனில், இரண்டாம் கட்ட நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை கேட்பார். என்ன பிரச்சனை? எங்கு நின்று பேச வேண்டும்? என்ன பேச வேண்டும்? மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த என்ன ஏற்பாடு? என்பதை பற்றி விரிவாக பேசியிருப்பார். அதன் பின்னர்தான் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும். ஆனால் தவெகவில் விஜய் இப்படி எந்த நிர்வாகிகளையும் சந்தித்து பேசவில்லை என சொல்லப்படுகிறது.
புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மற்றும் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோரிடம் மட்டும் கலந்தாலோசித்துவிட்டு முடிவெடுக்கிறார். எனவே இரண்டாம் கட்ட நிர்வாகிகள், விஜய்யை பார்க்க முடியாமல் போய்விடுகிறது. விஜய் களத்திற்கு வரும்போது, தொண்டர்களை கட்டுப்படுத்துவதை விட, விஜய்யின் கவனத்தை பெறுவதிலேயே நிர்வாகிகள் தீவிரமாக இருக்கிறார்கள். எப்படியாவது விஜய் நம்மை பார்த்துவிட மாட்டாரா? அவரது கடைக்கண் பார்வை நம்மீது பட்டுவிடாதா என விஜய்யின் வாகனத்தையே சுற்றி சுற்றி வருகின்றனர்.
இந்த இடத்தில்தான் தொண்டர்களை ஒருங்கிணைக்க முடியாமல் போய்விடுகிறது. அதேபோல விஜய் சொல்வதை கேட்கும் மனநிலையிலும் தொண்டர்கள் இல்லை. விஜய்யை பார்க்க வருபவர்கள் தொண்டர்கள் கிடையாது, ரசிகர்கள். எனவே அவர்களை கட்டுப்படுத்துவது ரொம்ப சிரமமான வேலை. இப்படியாக விஜய் மீதும் தொண்டர்கள் மீதும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
இந்நிலையில்தான் என்னை பின் தொடர்பவர்கள் ரசிகர்கள் கிடையாது, கருத்தியல் மணிகள் என்று சீமான் பேசியிருக்கிறார். "என்னை போல உணர்வு பெற்ற லட்சக்கணக்கான பிள்ளைகள் என்னோடு வந்தார்கள். அதுதான் நாம் தமிழர் என்கிற அரசியல் புரட்சி படை. இது கட்சி கிடையாது. சீருடை அணியாத, ஆயுதம் ஏந்தாத, கருத்தியல் புரட்சியை தூக்கி நிறுத்துகிற, தமிழ் தேசிய விடுதலைக்கான, மக்கள் ராணுவம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். அதனால இது மறைமுகமா பாஜகவுக்கு ஆதரவு என விமர்சிக்கிறாங்க. பாஜக தனியா நிக்கட்டும், நானும் தனியா நிக்கிறேன். என்னை விட ஒரு ஓட்டு கூட வாங்கி காட்ட சொல்லுங்க.
என்னை பார்க்க வர கூட்டம் ரசிகர் கூட்டம் இல்ல, கருத்தியல் கூட்டம். தத்துவ கூட்டம், போராளிகள் கூட்டம், கொள்கையாளனின் கூட்டம். நான் வைத்திருப்பது பதர்கள் அல்ல, மணிகள் நெல்மணிகள். ஒன்று விதைத்தால் ஓராயிரம் ஈராயிரமாக வெடித்து முளைத்து வரும்" என்று பேசியிருக்கிறார். இவரது பேச்சு விஜய்யை விமர்சிப்பதாக பலரும் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications