ஜூடோ வீரர் மீது மின்கம்பம் விழுந்து கணுக்கால் முறிவு..அலட்சியம்தான் காரணம்.. சீமான் கொந்தளிப்பு
சென்னை: மின்கம்பம் விழுந்து ஜூடோ வீரர் விக்னேஸ்வரன் கால் இழந்துள்ளதற்கு அவருக்கு அரசு வேலையும் ரூ 50 லட்சம் நிவாரணமும் அளிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஜூடோ வீரரான விக்னேஸ்வரன். இவர் மதுரையை சேர்ந்தவர். இவரது கணுக்கால் பகுதியில் மின்கம்பம் சாய்ந்து விழுந்தது. இதில் அவருடைய கால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் எதிர்காலத்தில் ஜூடோ விளையாட்டில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

இவருக்கு அரசு வேலை வழங்கும் வரை அரசு நிவாரணத்தை வாங்க மாட்டேன் என இவரது தாய் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விக்னேஸ்வரனை மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை கோச்சடை பகுதியில் மின்வாரிய ஊழியர்களின் அலட்சியத்தால் மின்கம்பம் சாய்ந்து விழுந்த விபத்தில் சிக்கி, இளம் ஜூடோ வீரர் அன்புத்தம்பி விக்னேசுவரன் தனது இடது கணுக்காலை இழந்த செய்தி மிகுந்த மனவலியைத் தருகிறது. மின்வாரிய ஊழியர்கள் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாமலும்,முன்னெச்சரிக்கை பலகைகள் வைக்காமலும் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டதன் விளைவே விளையாட்டுத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற பெருங்கனவோடு இருந்த இளம் பிள்ளையின் கனவுகள் சிதையக் காரணமாகியுள்ளது. எனவே, தம்பி விக்னேசுவரனுக்கு நேர்ந்த கொடுமைக்கு மின்வாரியமும். தமிழ்நாடு அரசுமே பொறுப்பேற்று. அவருக்கு அரசு வேலையும். துயர் துடைப்பு நிதியாக 50 லட்ச ரூபாயும் வழங்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
அன்புத்தம்பி விக்னேசுவரன் எதன் பொருட்டும் மனம் கலங்காமல், உள்ள உறுதியுடனும், துணிவுடனும் வாழ்வினை எதிர்கொள்ள வேண்டுமென்றும், நம்பிக்கையுடன், விடாமுயற்சி செய்தால் தங்களுக்கு விருப்பமான வேறு துறையில் உறுதியாகச் சாதிக்க முடியும் என்றும் தெரிவித்துக்கொள்கிறேன். தம்பி விக்னேசுவரன் விபத்தின் பாதிப்புகளிலிருந்து விரைந்து மீண்டிட விழைகிறேன்! என சீமான் தெரிவித்துள்ளார்.
ஜூடோ வீரர் பரிதி விக்னேஸ்வரன் அடுத்த மாதம் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்வதற்காக பயிற்சி மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் கோச்சடை சாலையில் சென்று கொண்டிருந்த போது விக்னேஸ்வரன் மீது மின்கம்பம் விழுந்து அவருடைய கணுக்கால் முறிந்தது.












Click it and Unblock the Notifications