திருபுவனம் ராமலிங்கம் கொலையில் உண்மை குற்றவாளிகளை கைது செய்க… சீமான் வலியுறுத்தல்
சென்னை:திருபுவனம் ராமலிங்கம் கொலையின் உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் வருமாறு: தஞ்சாவூர் மாவட்டம், திருபுவனத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் நகரச் செயலாளர் ராமலிங்கம் அவர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து அவர்களது குடும்பத் துயரில் நாம் தமிழர் கட்சி முழுமையாக பங்கேற்கிறது.வன்முறை என்பது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல.
ஒரு உயிரைப் பறித்து அதில் சுகம் காண்பது மிகக் கொடூரமான மனநிலையாகும். எதன்பொருட்டும் இதுபோன்ற படுகொலைகளை நியாயப்படுத்தவோ, சகித்துக் கொள்ளவோ முடியாது. இந்த கொலையினை எவர் செய்திருந்தாலும் அவர்களை தயவு தாட்சணையின்றி தண்டிக்க வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.
அதேநேரத்தில், இவ்விவகாரத்தைத் தங்களது அரசியல் லாப நோக்கிற்காக கையிலெடுத்து ஆதாயம் பெற மதப்பூசல்களை உருவாக்க முயலும் மத அடிப்படைவாதிகளிடம் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.
இந்த கொலை வழக்கின் விசாரணை தொடங்குவதற்கு முன்னரே அதன் போக்கைத் தீர்மானிப்பது என்பது உண்மையான குற்றவாளிகளை தப்பிக்க வைக்கவே உதவும் என்ற அபாயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, இக்கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை உடனடியாகக் கண்டறிந்து கைது செய்ய வேண்டும்.
அரசியல் தலையீடற்ற ஓர் நேர்மையான விசாரணையை நடத்தி அவர்களுக்கு தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும். அப்பகுதியில் மத ரீதியிலான பதட்டங்களை உருவாக்குகிற எச்செயலையும் அனுமதிக்கக்கூடாது என்று அவர் அந்த அறிக்கையில் சீமான் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications