விஜய் மாநாடுக்கு கூட்டமா? நயன்தாரா கடை திறந்தப்போ கூட 4 லட்சம் பேர் கூடினாங்க.. சீமான் கொடுத்த பதில்
சென்னை: விஜய் கட்சி மாநாட்டுக்கு கூடிய கூட்டம் பற்றி பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “நயன்தாரா கடை திறந்ததற்கு கூட 4 லட்சம் பேர் கூடினார்கள், சினிமா நடிகனைப் பார்க்க வரும் கூட்டமும் கொள்கைக்காரர்களின் கூட்டமும் ஒன்றா?” எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “திராவிடமும் தமிழ் தேசியமும் எப்படி ஒன்றாக முடியும்? இதற்காக திராவிடம் வேண்டும்.. இதற்காக தமிழ் தேசியம் வேண்டும் என்று யார் விளக்கம் சொல்லுவார்கள்? விஜய்யா அவருக்கு கீழ் உள்ள தம்பிகளா? விஷமும் விஷத்தை முறிக்கும் மருந்தும் எப்படி ஒன்றாக இருக்க முடியும்?

மதச்சார்பற்ற சமூக நீதி கொள்கையா?: மதச்சார்பற்ற சமூக நீதி எப்படி? பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை ஏற்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? அருந்ததியினர் உள் ஒதுக்கீட்டை ஏற்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? திமுக கூடத்தான் ரொம்ப காலமாக சமூக நீதி பேசுகிறது. வில்லனும் கதாநாயகனும் எப்படி ஒன்றாக இருக்க முடியும்? கொலைகாரன் ஒருவனைத்தான் கொல்வான், குடித்தால் பல பேர் தாலி அறுபடும் என மதுக்கடைகளை மூடச் சொல்வது தமிழ் தேசியம்.
மும்மொழிக் கொள்கை என்பது மோசடி கொள்கை, இரு மொழி கொள்கை என்பது ஏமாற்று கொள்கை. தமிழ் எங்கள் கொள்கை. தமிழ் பயிற்று மொழி, ஆங்கிலம் பயிற்று மொழி, வேண்டுமென்றால் பிற மொழிகளை கற்கலாம். நான் சொல்வது குட்டிக்கதை அல்ல, வரலாறு.
பெற்ற தாயாகவே இருந்தாலும்: திராவிடமும், தமிழ் தேசியமும் வேறு வேறானவை. வில்லனும், கதாநாயகனும் எப்படி ஒரே ஆளாக இருகக் முடியும்? இரண்டும் ஒருவரின் கொள்கையாக இருக்க முடியாது. ஒன்று கொள்கையை மாற்றுங்கள் அல்லது எழுதிக்கொடுப்பவரை மாற்றுங்கள். என்னைப் பெற்ற தாய் தந்தையாகவே இருந்தாலும், கடவுளே ஆனாலும் என் கொள்கைக்கு எதிராக இருந்தால் எதிரி எதிரிதான். அப்புறம் அண்ணன் என்ன? தம்பி என்ன? ரத்த உறவை லட்சிய உறவுதான் மேலானது. குடும்ப உறவை விட கொள்கை உறவுதான் மேலானது.” என்றார்.
விஜய் மாநாட்டுக்கு கூடிய கூட்டம்: விக்கிரவாண்டியில் அக்டோபர் 27 ஆம் தேதி நடந்த விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு பல லட்சக்கணக்கானோர் திரண்டது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, “கூட்டம் எல்லாருக்கும் வரும். திரைப்பட நடிகனைப் பார்க்க வரும் ரசிகன் வேறு, கொள்கைக்காரன் வேறு. இரண்டையும் ஒப்பிடுவது தவறு.
நயன்தாராவை பார்க்க 4 லட்சம் பேர்: சேலத்தில் விவசாயிகள் போராட்டத்துக்கு 40 பேர் வந்தார்கள். கடை திறக்க வந்த நயன்தாராவை பார்க்க 4 லட்சம் பேர் வந்தார்கள். விமானப்படை சாகசத்தைப் பார்க்க 15 லட்சம் பேர் வந்தார்கள். எங்கள் தலைவன் எங்களுக்கு கற்பித்தது.. 5 பேர் கூடினால் சாதிக்கலாம்.. 50 பேர் கூடினால் விவாதிக்கலாம். எனக்கு 36 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர். எனது கூட்டம் 36 லட்சம் பேர். இப்போ எது பெரிய கூட்டம். இன்னொரு நடிகர் அழைத்தாலும் கூட்டம் வரும். விஜயகாந்துக்கு மதுரையில் கூடாத கூட்டம் இப்போது கூடிவிட்டதா?” எனக் கேள்வி எழுப்பினார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், கட்சி மாநாட்டில் பேசும்போது திராவிடமும், தமிழ் தேசியமும் இந்த மண்ணின் இரண்டு கண்கள் எனக் கூறினார். அதனை விமர்சித்து வரும் சீமான், நேற்று நடந்த கூட்டத்தில் விஜய்யை கடுமையாக அட்டாக் செய்து பேசினார். இந்நிலையில், இன்றும் பிரஸ் மீட்டில் விஜய்யை தாக்கிப் பேசியுள்ளார் சீமான்.












Click it and Unblock the Notifications