"பாஜக ஒரு மதவாத கட்சி.. கூட்டணியில் இருந்தது சாதிக் கட்சி.. சீமான் கடும் தாக்கு!
சென்னை: "2024-ல் பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்தது பாமக. எல்லா சாதிக் கட்சிகளையும் இணைத்து ஒரு மதக் கட்சி தலைமை வகித்து வழிநடத்துகிறது." என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் நெல்லை இளைஞர் கவின், அவர் காதலித்த பெண்ணின் சகோதரரால் ஆணவக் கொலை செய்யப்பட்டது குறித்து கடுமையாகப் பேசினார்.

சீமான் பேசுகையில், "கல்வி இங்கு அறத்தைப் போதிக்கவில்லை. படித்தவர்கள் சாதி, மதம் கடந்து மானுடனாக வருவான் என நினைக்கிறோம். பள்ளிக்கூட மாணவர்கள் சாதிய வெறியோடு வெட்டிக் கொண்டதும் அதே பகுதியில் நடக்கிறது. தமிழ் ஒரு பேரன்பின் தாய், அதில் ஏது ஏற்றத்தாழ்வு? அறம் பாடியவர்கள் நம் முன்னோர்கள். இந்த தலைமுறை இளைஞர்களிடையே சாதி எண்ணம் இருப்பது நெஞ்சை பதற வைக்கிறது." எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய சீமான், "சாதி, மதம் தான் அரசியல் செய்கிறது. 2024 ஆம் ஆண்டு சாதிக் கட்சிகளை இணைத்து பாஜக கூட்டணி அமைத்தது. 2024-ல் பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்தது பாட்டாளி மக்கள் கட்சி. எல்லா சாதிக் கட்சிகளையும் இணைத்து ஒரு மதக் கட்சி தலைமை வகித்து வழிநடத்துகிறது. பாஜக ஒரு மதவாத கட்சி என்பது தெரியும். அதோடு கூட்டணி அமைத்தது எல்லாம் யார் யார்?
சம பங்கு என்றால் மாளிகையில் இருப்பவர்களுக்கும், தாழ்தளத்தில் குடிசையில் இருக்கிறவங்களும் சம பங்கு என்று சொன்னால் ஏற்புடையதாக உள்ளதா? உரிய பங்கு என வர வேண்டும். நாட்டில் அடிப்படையை தகர்த்து மறுகட்டடம் கட்டவேண்டும். வெளிப்படையாகவே அநீதிகளால் கட்டமைக்கப்பட்ட சமூகத்தை தகர்த்து முற்றிலுமாக புதிய ஒரு சமூகம் படைப்பது தான் புரட்சி என்கிறார்கள். அதற்காகதான் நாங்கள் போராடுகிறோம்.
அதனால் தான் நாங்கள் அடிப்படை அமைப்பு அரசியல் மாற்றம் என்கிறோம். இந்த அரசியலுக்குள், இந்த அமைப்புகள் ஒன்றும் செய்யமுடியாது. இந்த உலகத்தில் எப்படி கூட்டி கழித்தாலும் மீதம் உள்ளது அன்புதான்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications