வருண்குமார் மனநல ஆலோசனை பெற வேண்டிய நேரம் இது! ஹைகோர்ட்டில் சீமான் பதில் மனு!
சென்னை: வருண்குமார் ஐபிஎஸ் மனநல ஆலோசனை பெறும் நேரம் வந்துவிட்டது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், டிஐஜி வருண்குமார் இடையே அண்மையில் கருத்து மோதல்கள் ஏற்பட்டன. இரு தரப்பும் மாறி மாறி கருத்துகளை தெரிவித்தனர். அதிலும் நாம் தமிழர் கட்சியினர், வருண்குமார் ஐபிஎஸ் குடும்பத்தினரையும் அவதூறாக பேசியிருந்தனர்.

இது தொடர்பாக திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் தனக்கு எதிராக பொதுவெளியில் சீமான் ஆதாரம் இல்லாமல் அவதூறு கருத்துகளைத் தெரிவிக்க சீமானுக்கு தடை விதிக்கக் கோரி ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் இரண்டு கோடியே பத்து லட்சம் மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், டிஐஜி வருண்குமாருக்கு எதிராக சீமான் பேச இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. மேலும் சீமான் தரப்பு பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு கடந்த 15 ஆம் தேதி நீதிபதி தனபால் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சீமான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குறிப்பிட்ட விஷயங்கள் குறித்து மட்டும் பேசக்கூடாது என தெரிவிக்காமல், நீதிமன்றத்தின் உத்தரவு பொதுவாக உள்ளது. அதனால், உத்தரவை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தார். மேலும், சீமான் தரப்பில் விரிவான பதில் மனுத் தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க வேண்டும் எனவும் வாதிட்டார்.
இதையடுத்து, ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை நீட்டித்த நீதிபதி, சீமான் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 28-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார். இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி தனபால் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது சீமான் தனது பதில் மனுவை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறுகையில், வருண்குமார் ஐபிஎஸ் மனநல ஆலோசனை பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது. தனக்கு எதிரான விமர்சனங்களை கூட தாங்கிக் கொள்ள முடியாதவர் எப்படி ஐபிஎஸ் அதிகாரியானார்? வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் சிறை சென்றவர். எனவே அவர் என் மீது தாக்கல் செய்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சீமான் தனது பதில் மனுவில் கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications