தம்பி அழைத்து அண்ணன் போக முடியாது.. விஜய் பேசுவதெல்லாம் என் வசனம்.. சீமான் கொடுத்த விளக்கம்!
சென்னை: முதல்வர் ஸ்டாலினும், எடப்பாடி பழனிசாமியும் புதிதாக கட்சி தொடங்கி 1% வாக்கு வாங்குங்கள் என்று பார்ப்போம் என்று விஜய் பேசிய வசனம் என்னுடையது என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். என்னுடைய வசனத்தை விஜய் பேசக் கூடாது என்ற சீமான், தம்பி விஜய் அண்ணன் நான் கூட்டணிக்கு செல்ல முடியாது என்றும் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் நடக்கவுள்ள சட்டசபைத் தேர்தலில் 4 முனைப்போட்டி இருக்கும் என்று கருதப்படுகிறது. திமுக கூட்டணி, என்டிஏ கூட்டணி, தவெக மற்றும் நாதக என்று 4 கட்சிகள் நேரடியாக போட்டியிட உள்ளன. இதனால் 2016 சட்டசபைத் தேர்தலில் நடந்த சம்பவத்தை போல் வெற்றி, தோல்விக்கு இடையில் மிகவும் குறைந்த வாக்குகளே காரணமாக அமையும் என்று பார்க்கப்படுகிறது.

இதனிடையே விஜய் அரசியலுக்கு வந்தபின், தவெக - நாதக இடையில் கூட்டணி உருவாகும் என்று பேசப்பட்டு வந்தது. ஆனால் பெரியாரை கொள்கைத் தலைவராக விஜய் அறிவித்ததால், விஜய்யை கடுமையாக சீமான் விமர்சிக்க தொடங்கினார். இன்னொரு பக்கம் விஜய் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று பேசிய போதும், யாரும் அவருடன் கூட்டணி அமைக்க முன்வரவில்லை.
அதேபோல் சீமான் தரப்பிலும் பிப்ரவரி 21ஆம் தேதி திருச்சியில் பிரம்மாண்ட மாநாடு நடக்கவுள்ளது. இந்த மாநாட்டில் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை சீமான் அறிமுகம் செய்ய உள்ளார். இந்த நிலையில் சென்னையில் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், பீகாரில் பாஜக - நிதிஷ் குமார் ரூ.10 ஆயிரம் கொடுத்தார்கள். அதுவும் விஜய்யின் அரசியல் வருகைக்காக தான் அறிவித்தார்களா?
மகளிர் உரிமைத் தொகை, கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1000 என்று திமுக கொடுப்பதை, தன்னுடைய அரசியல் வருகையால் என்று விஜய் நினைத்து கொள்கிறார்.. அது அப்படியல்ல.. திமுக ஆட்சி முறையை வளமையாக வைத்துக் கொள்கிறார்கள். நான் ஆர்ட்சிக்கு வந்தால் இந்த முறையை ஒழிப்பேன்.. விஜய் என்ன செய்வார்? யாரும் சரியாக இல்லை என்று சொல்வது எளிது. ஆனால் எது சரி என்பதை பேச வேண்டும்.
விஜய் ஒருமுறை ஆட்சி அமைத்துவிட்டு, அதன்பின் ஆட்சியில் பங்கு என்று சொன்னால் தான் அவருடன் கூட்டணி அமைப்பார்கள். ஒரு முறை கூட ஆட்சியில் இல்லாத போது, ஆட்சியில் பங்கு என்று கூறினால் யாருக்கு நம்பிக்கை வரும். அதேபோல் எனக்கு விஜய் ஏன் கூட்டணிக்கு அழைப்பு விடுக்க வேண்டும். விஜய்க்கு முன் 16 ஆண்டுகளாக களத்தில் இருக்கிறேன்.
யார் பெரியவன்? நான் அழைத்துதான் விஜய் வர வேண்டும்.. தம்பி அழைத்து அண்ணன் போகக் கூடாது. அதேபோல் ஸ்டாலின் திமுகவையும், எடப்பாடி பழனிசாமி அதிமுகவை விட்டு புதியக் கட்சி தொடங்கி ஒரு சதவிகித வாக்குகள் வாங்க திராணி இருக்கிறதா என்ற கேள்வி என்னுடையது. அந்த வசனத்தை விஜய் பேசக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications