நாங்க படுதோல்வி அடையவில்லையே.. ஹெச். ராஜாவை ஏன் கைது செய்யவில்லை? சீமான்
சென்னை: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி படுதோல்வி அடையவில்லை; பல இடங்களில் வென்றுள்ளோம்; இன்று இல்லை எனில் நாளை வெல்வோம் என்று அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் நேற்று முதல் வெளியாகி வருகின்றன. திமுக பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றி உள்ளது. அதிமுக பெருந்தோல்வியை சந்தித்துள்ளது.
முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்களை அதிமுக பெற்றிருந்தது. ஆனால் இம்முறை மிகப் பெரிய தோல்வியை அதிமுக எதிர்கொண்டுள்ளது.
திமுக அமோக வெற்றி.. விடிய விடிய வாக்கு எண்ணிக்கை.. அதிமுக தொடர்ந்து பின்னடைவு: ஊரக உள்ளாட்சி தேர்தல்
நாம் தமிழர் கட்சி தோல்வி
காங்கிரஸ், பாமக, விசிக ஆறுதலான இடங்களைப் பெற்றுள்ளன. ஆனால் பாஜக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி ஆகியவை படுதோல்வியைச் சந்தித்துள்ளன. கட்சிகள் அடிப்படையில் இல்லாத பதவிகளுக்கான ஒரு சில இடங்களில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் சிலர் வென்றுள்ளனர். அண்மை காலமாக 100 நாள் வேலை திட்டத்துக்கு எதிர்ப்பு உட்பட சர்ச்சையான விஷயங்களை சீமான் பேசி வருகிறார். இது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது என்றே தெரிகிறது. சென்னையில் இது தொடர்பாக இன்று செய்தியாளர்கள் சீமானிடம் கேள்வி எழுப்பினர்.
படுதோல்வி அல்ல
இதற்கு பதிலளித்த சீமான், தேர்தலில் பல இடங்களில் நாம் தமிழர் கட்சி வெற்றிபெற்றுள்ளது, படுதோல்வி அடையவில்லை. நாங்கள் வளரும் கட்சி. படிப்படியாகத்தான் வளருவோம். இன்று இல்லை என்றால் நாளை நிச்சயம் வெல்வோம்.
நீங்க தனித்து போட்டியிடுங்க
அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் முதலில் தனித்து போட்டியிட்டு தங்கள் செல்வாக்கை நிரூபிக்க வேண்டும். எந்தக் கட்சி ஆட்சியில் உள்ளதோ அவர்களுக்குதான் மக்கள் வாக்களிப்பார்கள். அப்படித்தான் விஜய் ரசிகர்கள் சிலர் வென்றுள்ளனர். விஜய்க்காக மக்கள் வாக்களித்தார்களா? என்பது தெரியவில்லை.
ஹெச்.ராஜாவை ஏன் கைது செய்யலை?
சாட்டை துரைமுருகன் சாட்டையை அடிக்கடி வீசிவிடுவதால் பலருக்கு வலிக்கிறது. அதனால் கைது செய்யப்பட்டுள்ளார். சாட்டை துரைமுருகனை கைது செய்யும் போலீஸ், ஹெச்.ராஜாவை ஏன் கைது செய்யவில்லை?
பயங்கரவாத வரையறை என்ன?
முதலில் எது பயங்கரவாதம் என்பதை சொல்லுங்க? பயங்கரவாதம் என்பதற்கு வரையறை இருக்கிறதா? அப்படி வரையறை இருந்தால் வெளியிடுங்கள். இதை இதை செய்தால் பயங்கரவாதம், தேசதுரோகம் என சொல்லுங்கள். அதன்பிறகு எதை செய்தால் எப்படி செய்தால் பயங்கரவாதம், தேசதுரோகம் என பேசுவோம். இவ்வாறு சீமான் கூறினார்.