சீமான்: 3 மாத விசாரணைக்கு உத்தரவிட்ட ஹைகோர்ட்- 2 மாதத்தில் இழப்பீடு தர ஆர்டர் போட்ட சுப்ரீம் கோர்ட்!
சென்னை: நடிகையின் பலாத்கார புகாரை ரத்து செய்யக் கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மனுவை டிஸ்மிஸ் செய்து விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். சீமான் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றமோ, சென்னை உயர்நீதிமன்றத்தின் 'விசாரணை' உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.
நடிகை தம் மீது கூறிய பலாத்கார புகாரின் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் டிஸ்மிஸ் செய்திருந்தார். அப்போது நீதிபதி கூறியிருந்ததாவது: சீமான் மீதான நடிகையின் பாலியல் பலாத்கார புகார் தீவிரமானது; சீமான் மீது நடிகைக்கு எந்த காதலுமே இல்லை. குடும்ப சிக்கல் காரணமாகவே சீமானை நடிகை சந்தித்தார். ஆனால் சீமானோ, திருமணம் செய்து கொள்வதாக கூறி நடிகையுடன் உறவு வைத்துள்ளார்; நடிகையே வழக்கை தன்னிச்சையாக திரும்ப பெற முடியாது; ஆகையால் சீமான் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்வதற்கு முகாந்திரமும் கிடையாது; பலாத்கார புகார் மீதான விசாரணையை முடித்து 12 வாரங்களுக்குள் போலீசார் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதி இளந்திரையன் கூறியிருந்தார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராகவே உச்சநீதிமன்றத்தில் சீமான் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். சீமானின் மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் நாகரத்தினா, சதீஷ் சந்திர சர்மா இன்று விசாரித்தனர். இந்த விசாரணைக்குப் பின் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு: 2 மாதங்களுக்குள் சீமான், நடிகை தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி இழப்பீடு வழங்க வேண்டும். சீமான் மீது விசாரணை நடத்தும் சென்னை உயர்நீதிமன்றத்தின் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இவ்வழக்கின் விசாரணை 2 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது. சீமானின் மேல்முறையீட்டு மனு மீது தமிழ்நாடு அரசு பதிலளிக்க வேண்டும். இவ்வாறு உச்சநீதிமன்றத்தின் இன்றைய உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications