யாசின் மாலிக்கை நாம் தமிழர் கூட்டத்திற்கு அழைத்து வந்த சீமான்.. ஒரு பிளாஷ்பேக்
சென்னை: பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டிய வழக்கில் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி இயக்கத்தின் தலைவர் யாசின் மாலிக்கிற்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்ட நிலையில் அவர் நாம் தமிழர் கட்சியின் கூட்டத்தில் கலந்துகொண்ட புகைப்படங்கள் தற்போது அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன.
பயங்கரவாதிகளுக்கு ஆதரவான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாதக் குழு தலைவரான யாசின் மாலிக் உள்ளிட்ட 4 பேர் மீது கடந்த 2017 ஆம் ஆண்டு தேசிய புலனாய்வு முகமையால் (என்.ஐ.ஏ.) வழக்குப்பதிவு செய்தது.
அவர்களுக்கு எதிராக கடந்த 2019 ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு அதே ஆண்டு ஏப்ரல் மாதம் யுஏபிஏ உள்ளிட்ட வழக்குகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார்.
தூக்கு தண்டனை கோரிய என்ஐஏ - யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம் - பரபரப்பு தீர்ப்பு
குற்றவாளி என தீர்ப்பு
இந்த வழக்குகள் டெல்லியில் இருக்கும் தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தன. 3 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்ததை அடுத்து கடந்த 19 ஆம் தேதி நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியது. அதில், பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி வசூலித்ததாக என்.ஐ.ஏ. தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் யாசின் மாலிக் குற்றவாளி என தீர்ப்பு வெளியானது.
என்ன தண்டனை?
இந்த நிலையில் இன்று மாலை யாசின் மாலிக்கிற்கான தண்டனை விபரத்தை டெல்லி என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றம் வழங்கியுள்ளது. அதில் இந்தியாவுக்கு எதிராக போர் தொடுத்தல், யுஏபிஏ, பயங்கரவாதத்துக்காக நிதி திரட்டியது ஆகிய வழக்குகளில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட யாசின் மாலிக்கிற்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டதுடன் ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டு இருக்கிறது.
சீமானுடன் யாசின் மாலிக்
கடந்த 2013 ஆம் ஆண்டு யாசின் மாலிக் கடலூரில் நாம் தமிழர் கட்சி நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்டார். இதற்கு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அப்போது கடும் கண்டங்களை தெரிவித்தன. ஆனாலும், சீமான் பின் வாங்காமல் யாசின் மாலிக்கை கூட்டி வந்ததில் தவறில்லை என்றே வாதிட்டு வந்தார். கண்டங்களுக்கு பதிலளிக்கும் விதமாக யாசின் மாலிக்கை பாராட்டியும் அவர் அறிக்கை வெளியிட்டார்.
சீமான் அறிக்கை
அதில், "யாசின் மாலிக் மக்களால் பெரிதும் மதிக்கப்படும் தலைவர். காஷ்மீர் விடுதலை இயக்கம் ஒன்றும் தடை செய்யப்பட்ட இயக்கம் அல்ல. இலங்கையில் இனப்படுகொலை செய்த ராஜபக்சேவை இந்தியாவிற்கு அழைத்து வரவேற்பு அளிக்கும் பொழுது காஷ்மீரை சேர்ந்தவர் தமிழ்நாட்டிற்கு வரக் கூடாதா?. மேலும், தமிழ்நாட்டை போலவே காஷ்மீரும் இந்தியாவின் ஓர் அங்கம் தான். காஷ்மீர் பிரச்சனையில் தீர்வு காண பிரதமர் வாஜ்பாய் முதல் மன்மோகன் சிங் வரை நீங்கள் கூறும் பிரிவினைவாதத் தலைவர்கள் உடன் அதிகாரிகள் பேசி வருவது மட்டும் ஏன்?" எனத் தெரிவித்து இருந்தார்.
ஹபீஸ் சயீதுடன் யாசின் மாலிக்
இதேபோல் இந்தியாவால் தேடப்பட்டு வரும் லஷ்கர் இ தொய்பா தலைவர் ஹபீஸ் சயீதுடன் யாசின் மாலிக் அமர்ந்திருக்கும் புகைப்படமும் வெளியாகி சர்ச்சைக்கு உள்ளானது. அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை விதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2013 ஆம் ஆண்டு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் யாசின் மாலிக் நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் ஹபீஸ் சயீத் கலந்துகொண்டார். இந்த புகைப்படத்துக்கு விளக்கம் தந்த யாசின் மாலிக், "நான் நடந்த ஒருநாள் உண்ணாவிரதத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டதை போல ஹபீஸ் சயீதும் பங்கேற்றார். 15 நிமிடங்கள் அமர்ந்துவிட்டு சென்றார். ஆனால் இந்தியாவுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பவில்லை." எனக் கூறினார்.