பஞ்சாயத்து ஓவரா? மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோவுக்கு சீமான் திடீர் வாழ்த்து!
சென்னை: மதிமுக தலைமை கழக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோவுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இருவருமே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தீவிர ஆதரவாளர்கள். ஆனாலும் மதிமுகவை நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர்.

சீமானின் சுயநலம்
இதனால் பொறுத்து பொறுத்துப் பார்க்க வைகோ ஒரு கட்டத்தில் சீமானுக்கு எதிராக பொங்கினார். பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய வைகோ, பிரபாகரன் பெயரை சொல்லி அரசியல் நடத்துகிறார் சீமான். நான் பிரபாகரன் இடத்தில இருந்திருந்தால் இலங்கை போரில் தோற்றிருக்க மாட்டோம் என்கிறார். பிரபாகரனை வைத்து அரசியல் நடத்துவதோடு, தற்போது தன்னையே பிரபாகரன் என்று சொல்ல ஆரம்பித்து இருக்கிறார்., அவரின் உணர்ச்சிவசப்பட்ட பேச்சால் ஈர்க்கப்பட்ட இளைஞர்கள் பலர் அவர் கட்சியில் இருக்கிறார்கள், அவர்கள் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை. விடுதலை புலிகள் மீதுள்ள அபிமானத்தில் சீமான் பேச்சு உண்மை என நம்பி அவர் பின்னால் இருக்கிறார்கள். ஆனால் சீமான் அவர்களை தன் சுய நலத்துக்கு பலியிடுகிறார் என கொட்டித் தீர்த்தார்.

சீமான் பொய்
மேலும் மதிமுகவினருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே சில இடங்களில் மோதல்களும் நடந்தன. இதனால் கடும் கோபமடைந்த வைகோ, என்னை தெலுங்கர் என்றும் தமிழர் அல்ல என்றும் சீமான் கட்சியினர் மீம்ஸ் போடுகின்றனர். நியூட்ரினோ எதிர்ப்பு பேரணியில் என் அருகே வந்து வீரவணக்கம் என நாம் தமிழர் கட்சியினர் முழக்கமிட்டனர். பெரியார் அண்ணாவை பொதுமேடைகளில் சீமான் தரக்குறைவாக பேசுகிறார். தெலுங்கன் என என்னை விமர்சித்து அரசியலில் இருந்து ஓரம்கட்டப் பார்க்கிறார் சீமான். பிரபாகரனுடன் சீமான் பேசியது மொத்தம் 8 நிமிடம்தான். பிரபாகரனுடன் சீமான் இருக்கும் படமே போலியானது. விடுதலைப் புலிகளின் சீருடையிலேயே ஒரு மாத காலத்துக்கும் மேல் பிரபாகரனுடன் இருந்தவர் என்றார்.
Recommended Video

சீமானின் ஆமைக்கறி விவகாரம்
அண்மையில் கூட, சீமான் பிரபாகரனை இரண்டு நிமிடங்கள் கூட சந்திக்கவில்லை. பொய் சொல்கிறார். பிரபாகரனை சந்தித்து ஆமைக்கறி சாப்பிட்டேன் என பொய் சொல்கிறார் சீமான். விடுதலைபுலிகள் சீமான் மீதும் கடும் கோபத்தில் உள்ளனர். அனைத்து இடங்களுக்கும் சென்று புலிகள் பற்றியும் பிரபாகரன் பற்றியும் பேசி ஒன்றும் தெரியாத இளைஞர்களை தன்பக்கம் இழுக்கிறார். நியூட்ரினோவிடம் பணம் வாங்க தனது மகனை அனுப்பிவிட்டார் என்று சொல்லி அவர் ஆட்கள் மூலமாக காணொலியில் வெளியிட்டார். அன்றைக்கே சிவகாசி ரவி என் குடும்பத்திற்காக தீக்குளித்து இறந்துபோனார் என உருக்கமாக வைகோ பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தது.

துரைவைகோவுக்கு திடீர் வாழ்த்து
இந்நிலையில் மதிமுகவின் தலைமை கழக செயலாளராக துரை வைகோ நியமிக்கப்பட்டுள்ளார். துரை வைகோவுக்கு கட்சிப் பதவி வழங்குவது தொடர்பாக மதிமுக மாவட்ட செயலாளர்கள், உயர்நிலை குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தி இந்த நியமனத்தை வைகோ அறிவித்தார். தற்போது துரை வைகோவுக்கு திடீரென சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக பதிவிட்டுள்ள சீமான், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழகச் செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள அன்புச்சகோதரர் துரைவைகோ அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications