கரும்பு விவசாயி சின்னம் கிடைக்கலைன்னா சிக்கல்.. தேர்தல் ஆணையத்துக்கு ஓடிய நாம் தமிழர் கட்சி!
சென்னை: கரும்பு விவசாயி சின்னத்தை கர்நாடகாவை சேர்ந்த கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கிய நிலையில், வரும் லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு 'கரும்பு விவசாயி' சின்னத்தை ஒதுக்க வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடிதம் எழுதியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கி தொகுதி பங்கீடு வரை தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றன. திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வரும் சூழலில் நாம் தமிழர் கட்சி வழக்கம்போல் தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும், புதுச்சேரியிலும் தனித்துப் போட்டியிட உள்ளதாக அறிவித்துவிட்டது.

தமிழ்நாட்டில் சில நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களையே அறிவித்துவிட்டார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். விரைவில் அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. வேட்பாளர்கள் பெயருடன், கரும்பு விவசாயி சின்னத்திற்கு ஓட்டு கேட்டு, நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை முதல் கட்சியாக நாம் தமிழர் கட்சி தொடங்கிவிட்டது.
கடந்த தேர்தல்களில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் வழங்கப்பட்ட நிலையில், தற்போதும் அதே சின்னத்தில் போட்டியிட தயாராகி வருகிறது. ஆனால், கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்கியதா என்ற கட்சிக்கு தேர்தல் ஆணையம் கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கியுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 2 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்ட அக்கட்சி, இம்முறை தமிழ்நாடு, டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட 11 மாநிலங்களில் அக்கட்சி போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.
நாம் தமிழர் கட்சி கேட்டு பெற இருந்த கரும்பு விவசாயி சின்னத்தை வேறு ஒரு கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளதால், நாதகவுக்கு கரும்பு விவசாயி சின்னம் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனக் கோரி நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சங்கர், மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகுவிடம் மனு அளித்துள்ளார். அப்போது, சீமான் எழுதிய கடித்தத்தையும் தலைமை தேர்தல் அதிகாரியிடம் வழங்கியுள்ளனர்.
தேர்தல் ஆணையத்தின் முடிவைப் பொறுத்தே நாம் தமிழர் கட்சிக்கு மீண்டும் கரும்பு விவசாயி சின்னம் கிடைக்குமா? அல்லது வேறு சின்னம் ஒதுக்கப்படுமா என்பது தெரியவரும். தேர்தல் ஆணையம் தங்களுக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருந்தார்.
நாம் தமிழர் கட்சியின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்று, அக்கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை, நாதகவுக்கு கரும்பு விவசாயி சின்னம் கிடைக்காவிட்டால் அந்த கட்சிக்கு அது பின்னடைவாக அமைய வாய்ப்பு உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications