படம் எடுக்க போய் பிரபாகரனுடன் பேசியது 10 நிமிடம்தான்.. ஒரே மேடையில் சீமானை சீண்டிய காளியம்மாள்!
சென்னை: இலங்கைக்கு திரைப்பட இயக்குநராக சினிமா படம் எடுக்கப் போய் பிரபாகரனுடன் வெறும் 10 நிமிடம்தான் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார் என்று அக்கட்சியின் மேடையிலேயே அக்கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு அதே மேடையிலேயே சீமான் பதிலும் தந்தார்.
நாம் தமிழர் கட்சியின் மாவீரர் நாள் பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் பேசியதாவது: உண்மையிலேயே சீமான் படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். ஒருவேளை படம் எடுக்க இலங்கைக்குப் போய் ஷூட்டிங் மட்டும் எடுத்துவிட்டு திரும்பி வந்திருந்தால் இத்தனை பேருக்கான ஒரு தமிழ்த் தேசியத் தலைவராக சீமான் நமக்குள் புகுத்தப்பட்டிருக்கமாட்டார். அங்கே போய் 10 நிமிட பேச்சு (பிரபாகரனுடன்).. இவ்வளவு பெரிய மாற்றத்துக்கு காரணமாக, அவரது அரசியலை நிலை பெறச் செய்யக் கூடிய மையப்புள்ளியாக இருந்தது.

காளியம்மாள் பேச்சுக்கு சீமான் பதிலடி: இங்கே பேசிய என் தங்கை கூட சொன்னாங்க (காளியம்மாள்).. நான் படம் எடுக்கப் போனதாகவே எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். படம் எடுக்கப் போனவர்கள் வேற.. படம் எடுக்கிற குழுவினரை பயன்படுத்திக் கொண்டு என்னை அழைத்துக் கொண்டு போனது வேற.. படம் அவர்கள் எடுத்தார்கள்.. அந்த விழாவை திரைப்பட இயக்குநர் என்ற முறையில் நான் தொடங்கி வைத்தேன்.. படம் நான் எடுக்கவில்லை. மற்றவர்கள் எல்லாம் நான் 8 நிமிடம் (பிரபாகரனுடன்) பேசியதாக சொல்லுகிறார்கள்.. தங்கை (காளியம்மாள்) கூடுதலாக 2 நிமிடம் சேர்த்து 10 நிமிடம் என்கிறார். என்ன நடந்தது என்பது எனக்கும் என் தலைவனுக்கும் தெரியும்... இங்கே இருக்கிற பல போராளிகளுக்கும் தெரியும். அவர்கள் சொல்ல முடியாத நிலையில் இருப்பதால் எல்லோரும் ஆளுக்கு ஒன்றை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். 10 நிமிடம் (பிரபாகரனுடன்) பேசியவனிடம்தான் நம்பி ஒப்படைக்கிறோம். அவனை நம்பி விட்டுட்டுப் போகிறோம் என சொல்வார்களா (விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இறுதி நாட்களில்) ? என கேள்வி எழுப்பினார் சீமான்.












Click it and Unblock the Notifications