சீமான் + விஜய்.. நாம் தமிழருடன், தமிழக வெற்றிக் கழகம் கூட்டணியா? புஸ்ஸி ஆனந்த் முக்கிய விளக்கம்
சென்னை: வரும் 2026 சட்டசபை தேரத்லில் சீமானின் நாம் தமிழர் கட்சியுடன் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி வைக்கிறதா? என்ற கேள்விக்கு அந்த கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பதிலளித்துள்ளார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி உள்ளார். மேலும் 2026ல் நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதாக அவர் அறிவித்துள்ளார். தற்போது நிர்வாகிகள் நியமிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இத்தகைய சூழலில் தான் சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தனித்து களமிறங்கிய சீமானின் நாம் தமிழர் கட்சி எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. ஆனாலும் கூட அந்த கட்சிக்கு 8 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்தது. இதனால் நாம் தமிழர் மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட உள்ளது.
இதற்கு நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்து இருந்தார். அதற்கு சீமானும் நன்றி தெரிவித்தார். மேலும் சீமான் அளித்த பேட்டியில், ‛‛
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடக்கும் மாநாட்டுக்கு அழைப்பு வந்தால் நிச்சயம் செல்வேன். 2026ல் விஜய்யுடன் ஒன்று சேர வாய்ப்பு அமையுமானால் அதற்காக காத்திருக்கிறேன். அண்ணனும், தம்பியும் சந்திப்பது வழக்கம். அப்படித்தான் நானும் விஜய்யும் சந்தித்துக் கொள்கிறோம்'' என்றார்.
இந்நிலையில் தான் வரும் 2026 சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சியும், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகமும் கூட்டணி அமைத்து களம் காண்கிறதா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி நடிகர் விஜய் தரப்பில் இன்னும் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. இத்தகைய சூழலில் தான் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளரான புஸ்ஸி ஆனந்த் அதுபற்றி விளக்கம் அளித்துள்ளார்.
அதாவது நாமக்கல் மேற்கு மாவட்டம் குமாரபாளையம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பள்ளி பாளையத்தில் விஜயின் பிறந்தநாளையொட்டி அவரது கட்சியின் நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவில் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்றார். அப்போது, பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். இந்த வேளையில், பத்திரிகையாளர் ஒருவர், ‛‛2026 சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் ஏதேனும் கூட்டணி வைக்கப்போகிறீர்களா? சீமானின் நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணியில் இணையப்போகிறீர்களா?'' என்று கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு புஸ்ஸி ஆனந்த், ‛‛எல்லாமே தலைவர் தளபதி (விஜய்) தான் சொல்வார். இன்னும் 2 ஆண்டுகள் இருக்கிறது. எங்களின் தலைவர் அதுபற்றி அறிவிப்பார். எங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. மக்கள் எழுச்சியாக எங்களை வரவேற்கிறார்கள்'' என்றார். அடுத்து இன்னொரு பத்திரிகையாளர், ‛‛இந்த ஆண்டு இறுதியில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதில் கட்சி போட்டியிடுமா?'' என்று கேள்வி எழுப்பினார். அதற்கு, ‛‛நாங்கள் தான் ஏற்கனவே கூறிவிட்டோம். 2026ல் தான் போட்டியிடுவோம் என்று தெரிவித்துள்ளோம். கட்சி ஆரம்பிக்கும்போதே நாம் அதில் தெளிவாக தெரிவித்துள்ளோம்'' என்றார்.












Click it and Unblock the Notifications