பெரியார் என்ன செஞ்சாரு? சீமான் பேச்சால் கொந்தளிக்கும் கட்சிகள்! மவுனம் காக்கும் அதிமுக, தவெக விஜய்!
சென்னை: பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதற்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் பெரியாரை கொள்கைத் தலைவர்களாக ஏற்றுக் கொண்டிருக்கும் அதிமுக, தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகள் குறைந்தபட்சம் கண்டனம் கூட தெரிவிக்காதது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் குறித்து பேசியது தமிழகத்தில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பெரியாருக்கும் சமூக சீர்திருத்தத்திற்கும் என்ன சம்பந்தம் என பேசி, அவர் சில கருத்துக்களை கூறியிருந்த நிலையில் பெரியார் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான்," அம்பேத்கரையும், பெரியாரையும் ஒப்பிடுவது ஓர் முரண். இருவரின் சிந்தனையும் ஒன்றா? இருவருக்கும் சிலை வைத்தால் ஒன்றாகி விடுமா? அம்பேத்கர் உலகின் தலைசிறந்த கல்வியாளர்.
பெரியார் தனக்கு தோன்றுவதை எல்லாம் பேசுபவர். அம்பேத்கர், நான் யாருக்கும் அடிமையில்லை, எனக்கு யாரும் அடிமையில்லை என்றவர். ஆனால், பெரியார் சிந்தித்து, பேசியது, எழுதியது எல்லாம் தமிழ் பேரினத்திற்கு எதிரானது. நாங்கள் கூறுவது பொய் எனக் கூறுவது எப்படி? எதற்கு ஆதாரம் தேவை? நாங்கள்தான் ஆதாரத்தை வெளியிட்டு வருகிறோம். விடுதலை, பிறந்தநாள் செய்தி என வெளியிட்டது. அதில், இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள் எதிரிகள். இவர்கள் நமக்கு எதிரானவர்கள் எனக் குறிப்பிட்டனர்.
நமக்கு என்று யாரைக் குறிக்கிறீர்கள்? சமதர்மம், சமத்துவம்தானே உங்கள் கோட்பாடு? நமக்குக் கீழானவர்கள் எதிரி என்றால் அவர்கள் எந்த இனம்? இதைவிடக் கொடிய தீண்டாமை சிந்தனை உண்டா? திமுகதான் பாதுகாப்பு எனக் கூறும் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களை எதிரிகள் எனக் கூறுவதை எப்படி ஏற்கிறீர்கள்? துளுக்கர்களுக்குக் கொடுக்கும் இடஒதுக்கீடு சாணியில் கால் வைப்பதற்குப் பதிலாக மலத்தில் கால் வைப்பதற்குச் சமம் எனக் கூறியதற்குச் சான்று கேட்கவில்லையே?" என பேசியிருந்தார்.
சீமான் மேலும் சில கருத்துக்களை கூறியிருந்த நிலையில் பெரியார் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. தொடர்ந்து சீமான் வீட்டை முற்றுகையிடச் சென்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சீமானுக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது. சீமானுக்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கண்டன போஸ்டர்கள் ஒட்டுப்பட்டுள்ளன.
மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம், திமுக எம்பி கனிமொழி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் கழக தலைவர் கி வீரமணி உள்ளிட்ட பலரும் சீமானுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் பெரியாரைக் கொள்கை தலைவர்களாக ஏற்றுக் கொண்டிருக்கும் அதிமுகவும் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகமும் இதுவரை கண்டனம் கூட தெரிவிக்கவில்லை.
எம்ஜிஆர் ஜெயலலிதா காலத்தில் பெரியார் அதிமுகவின் கொள்கை தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட்டதோடு அவரது புகைப்படங்கள் அனைத்து போஸ்டர்களிலும் நிச்சயம் இடம்பெறும். இதற்கு இடையே புதிதாக கட்சியை ஆரம்பித்த விஜய் மாநாட்டில் பெரியாருக்கு பிரம்மாண்ட கட்டவுட் வைத்தது, அவரைக் கொள்கை தலைவராக ஏற்றுக் கொண்டதாக அறிவித்தார்.
மேலும் பெரியாரின் பிறந்தநாளுக்கு பெரியார் திடலுக்கு சென்று மரியாதை செலுத்தியது சமூக வலைதளங்களில் பேசுபொருள் ஆனது. இந்த நிலையில் சீமான் பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் அதிமுகவும் விஜயும் இது தொடர்பாக எதுவுமே பேசவில்லை. பொதுவாகவே விஜய் செய்தியாளர்களை சந்திப்பதில்லை. டிவிட்டர் மூலமே அரசியல் செய்து வருகிறார் என விமர்சிக்கப்படுகிறது. இந்த நிலையில் பெரியார் தொடர்பான சீமானின் பேச்சுக்கு குறைந்தபட்சம் ட்விட்டரில் கண்டனமாவது தெரிவித்திருக்கலாம் என்கின்றனர் நெட்டிசன்கள்.












Click it and Unblock the Notifications