பாஜக ஒரு பியூஸ் போன பல்ப்! இப்படித்தான் எதையாவது செய்யும்! அமித்ஷாவையும் விமர்சித்த சேகர்பாபு
சென்னை: பாஜக ஒரு பியூஸ் போன பல்ப், திமுகவை மிரட்டி பார்ப்பது போல மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகிறார். இதற்கெல்லாம் பயப்படும் கட்சி திமுக கிடையாது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை கொரட்டூரில் அன்னம் தரும் அமுத கரங்கள் என்ற நிகழ்ச்சியில் இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறுகையில் பாஜக ஒரு பியூஸ் போன பல்பு. அது ஏதாவது ஒன்றை செய்து கொண்டே இருக்கும்.

ஊழலை மறைக்கதான் திமுக இந்தி திணிப்பை எதிர்ப்பதாக அமைச்சர் அமித்ஷா கூறுவது ஏற்புடையது அல்ல. அமலாக்கத் துறை, சிபிஐ, வருமான வரித் துறை என அனைத்து ஏஜென்சிகளையும் வைத்து பாஜக தமிழகத்தில் சுற்றித் திரிகிறது.
ஆனாலும் எந்த ஊழலை அவர்கள் கண்டுபிடித்தார்கள்? நீதிமன்றமே அமலாக்கத் துறையின் இந்த செயலை கண்டித்துள்ளது. திமுகவை மிரட்டி பார்ப்பது போல அமித்ஷா பேசுகிறார். ஆனால் நம் முதல்வர் இந்தி திணிப்பை எதிர்ப்பதில் உயிரே போனாலும் துணிந்து நிற்பேன் என தெரிவித்துள்ளார்.
ஆகவே மிரட்டல் உருட்டல்களுக்கு எல்லாம் பயப்படும் கட்சி திமுக கிடையாது. அமலாக்கத் துறை, வருமான வரித் துறைகளை தோழமை கட்சி போல பாஜக வைத்துள்ளது. இவ்வாறு சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
டெல்லியில் மாநிலங்களவையில் நேற்று நடைபெற்ற விவாதத்தின்போது பேசிய அமித்ஷா, "மத்திய அரசு தமிழகத்தில் இந்தியை திணிப்பதாக திமுகவினர் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து விஷத்தை பரப்புகின்றனர். அவர்கள் செய்யும் ஊழலை மறைக்கவே இந்த மொழி சர்ச்சையை கையிலெடுத்துள்ளனர். ஒவ்வொரு மொழியும் நாட்டின் அணிகலன் போன்றது.
தென்னிந்திய மொழிகளுக்கு நாங்கள் எதிரானவர்கள் என்று திமுகவினர் சித்தரிக்க முயற்சிக்கிறார்களா? உங்கள் மொழியை வைத்து யார் அரசியல் செய்கிறார்களோ, அவர்களுக்கு ஒரு திட்டம் இருக்கிறது. மொழியின் பெயரைச் சொல்லி நாட்டை பிரிக்க திமுக முயற்சிக்கிறது. பொறியியல், மருத்துவத் துறை தேர்வுகளை தமிழில் மொழிபெயர்க்க தமிழக அரசுக்கு தைரியம் கிடையாது. ஆனால், மொழியின் பெயரில் விஷத்தை மட்டும் பரப்புகிறார்கள்." என்று காட்டமாக தெரிவித்தார்.
மேலும், "ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் ஒரு மொழியை (ஆங்கிலம்) நீங்கள் விரும்புகிறீர்கள், ஆனால் இந்திய மொழிகளை உங்களுக்கு பிடிக்கவில்லை. மும்மொழிக் கொள்கையை நீங்கள் கையில் எடுத்திருப்பது உங்கள் தவறுகளையும், நீங்கள் செய்த ஊழல்களையும் மறைப்பதற்காகத்தான். தமிழகத்தில் நீங்கள் கடந்த 4 ஆண்டுகளில் செய்த சாதனைகளையும், வளர்ச்சியையும் பற்றி பேசுங்கள். அப்போது நாங்கள் ஒவ்வொரு கிராமமாக சென்று உங்கள் தவறுகளை சுட்டிக் காட்டுவோம்," என்று அமித்ஷா சவால் விடுத்திருந்தார். அமித்ஷாவின் இந்த பேச்சு குறித்து சேகர்பாபுவிடம் கேட்ட போதுதான் அவர் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications