வீடு கட்ட போறவங்களுக்கு குட் நியூஸ்.. இ-சேவை மையத்தில் சுய சான்றிதழ் பெறலாம்.. தமிழக அரசு செம பிளான்
சென்னை: இ - சேவை மையங்கள் மூலம் சுய சான்றிதழ் கட்டிட அனுமதி வழங்குவதற்கு தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது. கூடுதல் கட்டணம் எதுவும் இன்றி இ சேவை மையங்களில் எளிதாக விண்ணப்பம் செய்து கட்டிட அனுமதி சான்றிதழ் பெறலாம் என்றும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.
பொதுமக்களின் நலன் கருதி தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பத்திரபதிவு, வீடு கட்டுவதற்கான அனுமதி சான்றிதழ் பெறுவது உள்ளிட்டவற்றில் லஞ்ச லாவண்யம் இருக்க கூடாது என்பதை உறுதி செய்வற்காக பல்வேறு புதிய திட்டங்களை அரசு புகுத்தி வருகிறது. அந்த வகையில், பொதுமக்கள் எளிதாக கட்டிட அனுமதி பெறுவதற்காக சுய சான்றிதழ் கட்டிட அனுமதி வழங்கும் திட்டத்தை கடந்த மாதம் அறிமுகம் செய்தது.

இந்த திட்டத்தின் படி, 2,500 சதுரடி மனையில் 3 ஆயிரத்து 500 சதுரடி வரையிலான தரைத்தளம் அல்லது தரைத்தளம் மற்றும் முதல் தளம் கொண்ட 2 குடியிருப்பு கட்டிடங்களுக்கு சுய சான்றிதழ் முறையில் உடனடி கட்டிட அனுமதி வழங்கப்படும். இந்த அனுமதியை பெற மக்கள் எங்கும் அலைய வேண்டாம். மக்களே நேரிடையாக https://onlineppa.tn.gov.in/SWP-web/ login என்ற வெப்சைட்டில் விண்ணப்பிக்கலாம்..
இந்த வெப்சைட் மூலம் விண்ணப்பிக்கும் போது யாருக்கும் பணம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. மக்களுக்கு மிகுந்த பயனளிக்கும் விதமாக இந்த திட்டம் அமைந்து இருந்தது. இருந்தாலும் சுயசான்றிதழுக்கு நேரிடையாக விண்ணப்பித்தால் ஏதாவது தவறு நடந்துவிடும் என அச்சப்படும் மக்கள், பிற நபர்கள் மூலமாக விண்ணப்பிக்கிறார்கள். அதாவது, என்ஜினியர்கள் அல்லது அத்துறையில் அனுபவம் மிக்க பிற நபர்கள் மூலம் விண்ணப்பிக்கிறார்கள்.
இதனால், அவர்கள் கட்டணத்தை விட கூடுதலாக ஆயிரக்கணக்கில் பணம் பெறுவதாக சொல்லப்படுகிறது. அதாவது, 50 ஆயிரம் வரை இதற்கு கட்டணமாக வாங்கி கொள்வதாக சொல்லப்படுகிறது. இதனால் பொதுமக்கள் தேவையின்றி பல ஆயிரங்களை இழக்க நேரிடுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகத்தான் சூப்பர் திட்டம் ஒன்றை தமிழக அரசு கையில் எடுத்துள்ளது.
அதாவது கட்டிட சுய சான்றிதழ் பெறும் போது மூன்றாம் நபர் தலையீட்டினால் லஞ்சம் தலை தூக்குகிறது. எனவே, இதை தடுப்பதற்காக இ சேவை மையங்கள் மூலமாக கட்டிட அனுமதி சான்றிதழ் வழங்க திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இ சேவை மூலமாக விண்ணப்பிக்கும் போது விண்ணப்பங்களில் ஏதேனும் தவறு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் பொதுமக்களுக்கு இருக்காது.
இதனால், மூன்றாம் நபர்களை நாடுவது குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் கட்டணம் எதுவும் இன்றி இ சேவை மையங்களில் எளிதாக விண்ணப்பம் செய்து கட்டிட அனுமதி சான்றிதழ் பெறலாம் என்றும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. இந்த திட்டம் பயன்பாட்டுக்கு வந்தால் பொதுமக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.
அதேவேளையில், சுயசான்றிதழில் வீடுகளுக்கான வரைபடம் எதுவும் இருக்காது. இதனால், வங்கிகளில் கடன் வழங்க மறுப்பதாக சொல்லப்படுகிறது. கட்டிட வரைபடத்தில் அரசு அனுமதி முத்திரை இருக்காது என்பதால், இந்த சான்றிதழை வைத்து வங்கிகள் கடன் அளிக்க மறுக்கிறார்களாம்.. எனவே, இந்த விவகாரத்தில் அரசு வழிகாட்டுதல்களை வங்கிகளுக்கு வெளியிட வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.












Click it and Unblock the Notifications